பழைய காரை வீணாக்காமல் செம்ம ஐடியா! நிச்சயமா 20 வருஷம் பழைய மாருதி காராக இருக்கும்!!
கார் மாடிஃபிகேஷன்களுக்கு (Car Modification) இந்தியாவில் பஞ்சமே கிடையாது. இத்தனைக்கும் நம் நாட்டில் கார்களை மாடிஃபை (Modify) செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள போதிலும், பலர் தங்களது கார்களை தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றி கொள்கின்றனர். ஆனால், இங்கு ஒருவர் தனது பழைய மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) காரை டிராக்டர் (Tractor) ஆக மாற்றி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். யார் அவர் என்பதை பற்றியும், அவர் உருவாக்கியுள்ள வேகன்ஆர் டிராக்டரை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மக்கள் நிறைய பேர் விரும்பி வாங்கும் கார்களுள் வேகன்ஆரும் ஒன்றாகும். 1999இல் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட வேகன்ஆர் சுமார் கடந்த 25 வருடங்களாக விற்பனையில் உள்ளது. 25 வருடங்களாக விற்பனையில் உள்ள போதிலும், இப்போதும் வேகன்ஆர் கார்களுக்கு கஸ்டமர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாதத்திற்கு 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வேகன்ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் அசால்ட்டாக விற்பனை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு முக்கிய காரணம், வேகன்ஆரின் மிகவும் குறைவான விலை ஆகும். அதுமட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக இயங்கக்கூடியதாக வேகன்ஆர் விளங்குகிறது. அதாவது, அந்த அளவிற்கு காம்பெக்ட்டான காராக வேகன்ஆர் உள்ளது.
ஆனால், அதேநேரம் காரின் உயரம் அதிகமாக உள்ளதால், காருக்குள் பயணிகள் நன்கு சவுகரியமாக அமர போதிய இடவசதி கிடைக்கிறது. இதனால், குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் வசிப்பவர்களின் முதல் சாய்ஸாக வேகன்ஆர் உள்ளது. அவ்வாறு, நாட்டின் தலைநகர் டெல்லி (Delhi)-இல் வாங்கப்பட்டு நகரத்தின் சாலைகளில் ஓட்டப்பட்ட பழைய வேகன்ஆர் கார் ஒன்று டிராக்டராக மாற்றப்பட்டுள்ளது.

அதாவது, நெரிசல் மிகுந்த டெல்லி சாலைகளில் ஓட்டி கிழிக்கப்பட்ட பழைய வேகன்ஆர் காரை வாங்கி, அதனை கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தனது பயன்பாட்டிற்கு ஏற்ப டிராக்டராக மாற்றிக் கொண்டுள்ளார். இதற்காக, வேகன்ஆர் காரின் பாதி பகுதியை முழுவதுமாக அகற்றி, அந்த இடத்தில் டிராக்டரின் லோடு சுமக்கும் டிரைலர் (Trailer) பகுதியை இணைத்துள்ளார். அதாவது, இது பாதி வேகன்ஆர் கார் மற்றும் பாதி டிராக்டர் ஆகும்.
காரின் பாதி பின்பகுதி நீக்கப்பட்டுள்ளதால், அவற்றுடன் சேர்ந்து பின் இருக்கை வரிசையும் நீக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வேகன்ஆர் டிராக்டரில் இருவர் மட்டுமே கேபினுக்குள் அமர முடியும். இருக்கைகளுக்கு பின்னால் எந்தவொரு தடுப்பு சுவரும் இல்லை. ஆகையால், இருக்கைகளில் அமர்பவர்கள் கதவுகளை திறந்துதான் வெளியேவர வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், இது மிகவும் அபாயகரமானது ஆகும்.
இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ (Video)-இல், இந்த பாதி வேகன்ஆர் கார், பின்னால் இணைக்கப்பட்டிருக்கும் லோடு பகுதியை சிறப்பாக இழுத்து செல்வதை பார்க்க முடிகிறது. மேலும் இந்த வீடியோவில், இந்த வேகன்ஆரின் என்ஜின் பகுதி அப்பட்டமாக வெளியே தெரிகிறது. ஏனெனில், காரின் பொனெட் (Bonnet) மூடவில்லை. கார் பொனெட் மூடியை தயார் செய்வது ஒன்றும் பெரிய வேலையில்லை.
அப்படியிருந்தும் இந்த வேகன்ஆர் டிராக்டரின் பொனெட் திறந்தப்படியே உள்ளது என்றால், இவர்கள் காரின் என்ஜின் சிஸ்டம் (Engine System)-இல் ஏதேனும் வேலைகளை செய்திருக்க கூடும். ஏனெனில், என்ஜின் சூடாகாமல் இருப்பதற்காக அதிக காற்றுக்கு பொனெட்டை மூடாமல் இருந்திருக்கலாம். அல்லது, பழைய வேகன்ஆர் காராக இருப்பதால், அதற்கேற்ற பொனெட் மூடியை தயார் செய்ய முடியாமல் போயிருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வாகனத்தை எல்லாம் சாலையில் பார்த்தாலே போலீசார் கொத்தாக அள்ளி சென்றுவிடுவர். ஏனெனில், இந்த டிராக்டர் வாகனத்தில் அந்த அளவிற்கு ஆபத்தான விஷயங்கள் நிறைய உள்ளன. ஆதலால், இதனை பார்த்த பின் நமது பழைய காரையும் இப்படி டிராக்டராக மாற்றிவிடலாமே என யாரும் கிளம்பிவிடாதீர்கள். மேலும், இதற்கு செலவும் அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








