சாதாரண கிராமத்து இளைஞர்களுக்குள் இவ்வளவு திறமையா!! ஆனால் எல்லாமே வீண்... இறுதியா நடந்தது என்ன?
உத்தர பிரதேசம் மாநிலத்தில் சகோதரர்கள் இருவர் இணைந்து ஹெலிகாப்டரை போன்று மாருதி சுஸுகி வேகன்ஆர் காரை வடிவமைத்துள்ளனர். இதற்காக பல மணிநேர உழைப்பையும், பொருட்செலவையும் இவர்கள் செலவழித்து இருப்பினும், அந்த காரை பயன்படுத்த முடியாத நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன நடந்தது? வாருங்கள் இனி பார்க்கலாம்.
வாகனத்தின் தோற்றம் மற்றும் செயல்படுதிறனை மேம்படுத்துவதற்காக, வாகனத்தின் முக்கியமான பாகத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறொரு பாகத்தை பொருத்துவது மாடிஃபிகேஷன் எனப்படுகிறது. பைக் & கார் மாடிஃபிகேஷன்களுக்கு இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், பைக் & கார்களை மாடிஃபை செய்பவர்கள் ஒருபக்கம் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கின்றனர்.

அத்தகையவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்களுக்கு போலீஸார் அபராதங்களை விதித்தாலும் பைக் & கார் மாடிஃபிகேஷன்கள் குறைந்தது போல் தெரியவில்லை. வாகனங்களை முறையாக அங்கீகாரம் பெற்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்தின் மூலமாக மாடிஃபை செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், சாலையோர மெக்கானிக் ஷாப்களில் நிறைய பேர் தங்களது வாகனங்களை மாடிஃபை செய்துக் கொள்வதை பார்க்க முடிகிறது.
இவ்வாறு, சாலையோர மெக்கானிக் ஷாப்களில் வாகனங்களை மாடிகை செய்வதே தவறு என கூறப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் இருவர் தங்களது மாருதி சுஸுகி வேகன்ஆர் காரை ஹெலிகாப்டர் போன்று மாற்றிக் கொண்டுள்ளனர். இதன்படி, காரின் மேற்கூரை மற்றும் பின்பக்கத்தில் அளவில் பெரியதாக இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால், இந்த வாகனம் பார்தப்பதற்கே கொஞ்சம் பயங்கரமானதாகவும், அபாயகரமானதாகவும் காட்சியளிக்கிறது. இந்த ஹெலிகாப்டர் உருவாக்கும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், இந்த வேகன்ஆர் காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறான ஒரு வாகனத்தை இரு சகோதரர்கள் உருவாக்குவது எப்படியோ போலீஸாருக்கு தெரியவர அவர்கள் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து வெளியாகியுள்ள படங்களில், வெள்ளை நிறத்திலான வேகன்ஆர் காரில் வெல்டிங் மூலமாக அந்த சகோதரர்கள் உருவாக்கியுள்ள இறக்கைகள் பெயிண்ட் இல்லாமல் இருப்பதை காணலாம். இன்னும் சொல்லப் போனால், இந்த வாகனத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்ற இடத்தில்தான் இதுகுறித்த விஷயம் தெரியவந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, போலீஸார் வழக்கம்போல் தங்களது ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, அந்த வழியாக இந்த சகோதரர்கள் தங்களது விசித்திரமான இந்த ஹெலிகாப்டர் காரை கொண்டு சென்றுள்ளனர். அம்பேத்கர் நகர் மாவட்ட காவல் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த ஹெலிகாப்டர் வாகனத்தை அனைவரும் ஆச்சிரியமாக பார்த்தப்படி செல்கின்றனர்.
எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வாகனம் குறித்த வீடியோவை இதுவரையில் 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இதில் சிலர் தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் கூறியதாவது, "புதுமையை நாம் மதிக்க வேண்டும். வளர்ச்சியை வளர்ப்பதற்கும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், அனைவரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் புதுமைகளை மதிப்பதும் ஊக்குவிப்பதும் முக்கியம்" என கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு பலர் அந்த சகோதரர்களின் கண்டுப்பிடிப்பையும், உழைப்பையும் பாராட்டினாலும் இத்தகைய செயல்கள் ஆபத்தில் சென்று முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, பெயிண்ட் அடிப்பதற்காக இவர்கள் வாகனத்தை வெளியே கொண்டுவந்த நேரத்தில், இவர்கள் உருவாக்கியுள்ள இறக்கைகள் மின்சார கம்பிகளில் உரச நேர்ந்தால் பெரிய விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









