இனி காரில் தனியாக சென்றாலும் இதை செய்வது கட்டாயம்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?
காரில் தனியாக செல்பவர்களும் மாஸ்க் அணிவது கட்டாயம் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர தொடங்கியுள்ள நிலையில், அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த உத்தரவின்படி, காரில் தனியாக பயணம் செய்பவர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் ஒருவருக்கு பாதுகாப்பு கவசம் என நீதிபதி பிரதீபா எம் சிங் கூறியுள்ளார்.

காரில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணியவில்லை என்பதற்காக மனுதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போதுதான், காரில் தனியாக பயணம் செய்பவர்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

காரில் தனியாக பயணம் செய்யும்போது மாஸ்க் அணிவதை ஏன் எதிர்க்கிறீர்கள்? எனவும் மனுதாரர்களுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது கார் ஓட்டுனர்கள் பலர் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கி விடுவதாகவும், இதன் மூலமாக கூட அவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

காரில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணியவில்லை என்ற காரணத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால், அதனை எதிர்த்து மூன்று பேர் நீதிமன்றத்தை நாடினர். இதில், வக்கீல் சவுரப் ஷர்மாவும் ஒருவர். மாஸ்க் இல்லாமல் தனியாக காரில் பயணிக்கும்போது சவுரப் ஷர்மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அபராத ரசீதை வழங்கியுள்ளனர். வக்கீல் சவுரப் ஷர்மா தவிர, மேலும் 2 மனுதாரர்கள் மாஸ்க் அணியாததற்காக காவல் துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்ததை நீதிமன்றத்தில் எதிர்த்திருந்தனர். மேலும் அபராதம் விதித்து மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக அவர்கள் இழப்பீடும் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உயர் நீதிமன்றமோ காரில் தனியாக பயணம் செய்தாலும் மாஸ்க் அணிய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டு விட்டது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவியது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும், அதன்பின் படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஆனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் மீண்டும் கோவிட்-19 வைரஸ் வேகமெடுத்து வருகிறது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மீண்டும் எடுக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும் கோவிட்-19 வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ளும் விதமாக அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. மாஸ்க் அணிவதன் மூலம் கோவிட்-19 தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications








