அனுமதி கொடுத்த கேரளா... இன்னும் ஐந்தே நாளில் தொடங்குகிறது மூலிகை பெட்ரோல் உற்பத்தி... விலை தெரியுமா?
கேரளாவில் வரும் செப்டம்பர் 10ம் தேதியில் இருந்து மூலிகை பெட்ரோலின் உற்பத்தி தொடங்கப்படும் என ராமர் பிள்ளை கூறியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அதிகப்படியான வரியை விதிப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் தற்போது வரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய, மாநில அரசுகள் இழக்க விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இருந்தாலும் வேறு வழியில்லாமல் அதிகப்படியான விலைக்கு பெட்ரோல், டீசலை வாகன ஓட்டிகள் வாங்கி கொண்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழகத்தை சேர்ந்த ராமர் பிள்ளை அவ்வப்போது பேசி வருகிறார். மிக குறைந்த விலைக்கு, தன்னால் மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய முடியும் என்பது ராமர் பிள்ளையின் வாதமாக உள்ளது. ஒரு தரப்பினர் ராமர் பிள்ளைக்கு ஆதரவாக உள்ளனர்.

அதே சமயம் இன்னும் சிலரோ, ராமர் பிள்ளையின் கண்டுபிடிப்புகள் போலியானது என்கிற ரீதியில் பேசி வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில் ராமர் பிள்ளை மற்றும் அவரது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலை சுற்றி, கடந்த பல வருடங்களாக பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், ராமர் பிள்ளை தற்போது பல்வேறு புதிய தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான ராமர் பிள்ளை, மதுரையில் நேற்று (செப்டம்பர் 4ம் தேதி), பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது விவசாய கழிவுகள், கழிவு நீர் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றின் மூலம் பயோ பெட்ரோல், பயோ டீசல் மற்றும் பயோ சமையல் எரிவாயு ஆகியவற்றை தயாரித்துள்ளதாக ராமர் பிள்ளை தெரிவித்தார்.

அத்துடன் வரும் செப்டம்பர் 10ம் தேதி முதல் மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் உற்பத்தியை தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்குவதற்கு கேரள மாநில அரசு எங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக கேரள மாநிலத்தின் மூணாறு பகுதியில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 10ம் தேதியில் இருந்து மூலிகை பெட்ரோலின் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்து கொள்கிறேன். மூலிகை பெட்ரோல் தொடர்பாக மத்திய புலனாய்வு துறை சார்பில் என் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் என்னை விடுவித்து விட்டது. என்னை விடுவித்தபோது போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

நான் கண்டுபிடித்துள்ள மூலிகை பெட்ரோலில், ரசாயனங்கள் எதுவும் கலப்படுவதில்லை என்பது நீதிமன்றத்தில் என்னால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மூலிகை பெட்ரோல் தொடர்பாக பலர் தொடர்ந்து பொய்யான செய்திகளை இன்னமும் பரப்பி கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நிலையில், மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்குவதற்கு கேரளா எங்களை அனுமதித்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் மற்றும் ஒரு லிட்டர் மூலிகை டீசல் 39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலையில் வரியும் அடங்கி விடும். அதே சமயம் 16 லிட்டர் பயோ சமையல் எரிவாயுவை 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். தமிழகத்திலும் மூலிகை பெட்ரோல், மூலிகை டீசலை தயாரிக்க முதல் அமைச்சரிடம் அனுமதி கேட்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்சத்தில், ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்'' என்றார். வாகன ஓட்டிகளால் இது மிகவும் குறைவான விலையாக பார்க்கப்பட்டாலும், ராமர் பிள்ளை இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது இது முதல் முறை கிடையாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications