8 வயதிலேயே ஸ்டியரிங் வீலை பிடித்த கைகள்... 22 வயதில் கொல்கத்தா சாலைகளை தெறிக்க விடும் கல்பனா மாண்டல்!
நெரிசல் மிகுந்த கொல்கத்தா சாலைகளில் பேருந்தை இயக்கி வரும் கல்பனா மாண்டல் என்ற 22 வயது இளம்பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்தியாவில் பெண்கள் தற்போது அதிகளவில் வாகனங்களை இயக்க தொடங்கியுள்ளனர். ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்கள் மட்டுமல்லாது கார்களை ஓட்டும் பெண்களின் எண்ணிக்கையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. ஆனால் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டக்கூடிய பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அரிதிலும் அரிதாக ஒரு சில பெண்கள் மட்டுமே கனரக வாகனங்களை இயக்குகின்றனர். இந்த வகையில் பரபரப்பான கொல்கத்தா சாலைகளில் பேருந்தை இயக்கி வரும் இந்தியாவின் இளம் பெண் ஓட்டுனர்களில் ஒருவரை பற்றிதான் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். கல்பனா மாண்டல் என்ற அந்த இளம் பெண் ஓட்டுனருக்கு தற்போது வெறும் 22 வயது மட்டுமே ஆகிறது.

கல்பனா மாண்டலின் தந்தைக்கு வாகனங்களை இயக்குவது என்றால் கொள்ளை பிரியம். அவரிடம் இருந்த ஆர்வம் மிக இளம் வயதிலேயே கல்பனா மாண்டலையும் தொற்றி கொண்டது. இளம் வயது என்றால் 22ல் அல்ல. வெறும் 8 வயதில். ஆம், 8 வயதிலேயே கல்பனா மாண்டல் பேருந்துகளை ஓட்ட கற்று கொண்டு விட்டார்!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கியதால், கல்பனா மாண்டலின் தந்தையால் வாகனங்களை இயக்க முடியாமல் போனது. எனவே குடும்ப பாரத்தை சுமப்பதற்காக கல்பனா மாண்டல் பேருந்துகளை இயக்க தொடங்கினார். தற்போது கல்பனா மாண்டலின் வருமானம்தான் அவர்களது குடும்பத்தின் பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

தனது தந்தை விபத்தில் சிக்கியபோது, குடும்பத்திற்கு ஆதரவு அளிப்பது என கல்பனா மாண்டல் முடிவு செய்தார். ஆனால் பெரும்பாலான பஸ் உரிமையாளர்கள் கல்பனா மாண்டலை நம்ப தயாராக இல்லை. எனினும் ஒரு பேருந்தின் உரிமையாளர் கல்பனா மாண்டலுக்கு வாய்ப்பு அளித்தார். அவரை கல்பனா மாண்டல் ஏமாற்றவில்லை.

இதுகுறித்து கல்பனா மாண்டலின் தந்தையான சுபாஷ் மாண்டல் கூறுகையில், ''கல்பனா தற்போது தினமும் பேருந்து ஓட்டுவதை, ஒரு சமயத்தில் அவரை நிராகரித்தவர்கள் பார்க்கின்றனர். இது எனக்கு பெருமையாக உள்ளது. ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனுக்காக அவர் தனது எதிர்காலத்தையே தியாகம் செய்துள்ளார்'' என்றார்.

இந்தியாவில் வாகனம் ஓட்டுவதற்கு கடினமான நகரங்களில் கொல்கத்தாவும் ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நகரத்தின் குறுகலான சாலைகளில் கல்பனா மாண்டல் பெரிய பேருந்தை ஓட்டுகிறார். கொல்கத்தாவின் சாலைகள் நெரிசலானவை என்பது நம் அனைவருக்குமே தெரியும். இந்த பிரச்னைகளை எல்லாம் சமாளித்து, அதுவும் இவ்வளவு இளம் வயதில் கல்பனா மாண்டல் பேருந்தை ஓட்டுவது ஆச்சரியமான விஷயம்தான்.

இப்படிப்பட்ட சாலைகளில் பேருந்தை ஓட்டும்போது ஏதாவது சிரமங்களை எதிர்கொண்டுள்ளீர்களா? என கேட்கப்பட்டபோது, என்னால் எப்படி பேருந்தை இயக்க முடிகிறது? என காவலர்கள் சிலர் ஆர்வமாக கேள்வி கேட்பார்கள் என கல்பனா மாண்டல் கூறினார். அதே சமயம் காவல் துறையை சேர்ந்த சிலர் அவரை ஊக்குவித்துள்ளனர். அத்துடன் கல்பனா மாண்டலை புகைப்படமும் எடுத்து கொண்டுள்ளனர்.
முழுக்க முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள ஒரு துறையில், அதுவும் இவ்வளவு இளம் வயதில் பிரகாசிப்பதன் காரணமாக, ஏற்கனவே சமூகத்தில் அறியப்பட்ட ஒரு பெண்ணாக கல்பனா மாண்டல் மாறியுள்ளார். கல்பனா மாண்டல் நிச்சயமாக மற்ற பெண்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையல்ல. இதுகுறித்து ஃபர்ஸ்ட்போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








