புல்லட்டில் சென்று நாய்களுக்கு உணவு அளிக்கும் இளம்பெண்... போலீஸ் மீது அதிர வைக்கும் குற்றச்சாட்டு...
புல்லட்டில் சென்று நாய்களுக்கு உணவு அளிக்கும் இளம்பெண் ஒருவர், போலீஸ் மற்றும் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. ஆனால் ஒரு சில நல்ல மனிதர்கள், நாய்களுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட மனிதர்கள் பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். கூடவே இந்த பணிக்கு அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பற்றியும் பார்க்கலாம்.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20)
பெங்களூரை சேர்ந்த பால் கோஸ்வாமி என்பவர், ஹூண்டாய் ஐ20 காரில் தினமும் வெளியே சென்று, 100 முதல் 120 நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். இவர் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். லாக்டவுன் அமலுக்கு வந்தது முதல் அவர் நாய், பூனைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். தற்போதைய நிலையில் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மட்டும் அவர் இதனை செய்கிறார்.
ஆனால் வெகு விரைவில் பெங்களூர் நகரம் முழுமைக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டு வருகிறார்.

மஹிந்திரா தார் (Mahindra Thar)
மஹிந்திரா தார் மிகவும் திறன் வாய்ந்த வாகனம். இதன் காரணமாகதான் மிக கடினமான நிலப்பரப்புகளில், அத்தியாவசிய சேவைகளை வழங்கி கொண்டிருப்பவர்கள் மஹிந்திரா தாரை பயன்படுத்துகின்றனர். இந்த வரிசையில், கோவாவில் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பலரும் மஹிந்திரா தார் காரை தங்களது அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக இந்தியாவின் மற்ற மாநிலங்களை போலவே கோவாவும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக ஆட்கள் இல்லாமல் பீச்கள் காற்று வாங்கி கொண்டுள்ளன. இப்படிப்பட்ட நிலையில், உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மஹிந்திரா தார் காரை, நாய்களுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் (Isuzu D-Max V-Cross)
ஊரடங்கு உத்தரவால் தவித்து வரும் நாய்களுக்கு, கௌஸ்டவ் முகர்ஜி என்பவர் இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனத்தில் உணவு வழங்கி வருகிறார். இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக திகழும் பிக்கப் அப் டிரக்குகளில் ஒன்றான இசுஸு வி-க்ராஸ், இத்தகைய இக்கட்டான நேரங்களில் உதவி செய்யும். இந்த வாகனத்தில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்று வினியோகம் செய்வது சுலபம்.

கடந்த காலங்களில் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் வந்த சமயத்தில், இசுஸு வி-க்ராஸ் வைத்துள்ள பலர் நிவாரண பொருட்களை எடுத்து சென்று வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் இசுஸு வி-க்ராஸ் உரிமையாளர்கள் தற்போதும் நாய்களுக்கு உணவு அளிக்க அந்த வாகனத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

எலெக்ட்ரிக் ரிக்ஸா (E-Rickshaw)
இந்தியாவில் நாய்களுக்கு உணவு அளிக்கும் பணிகளில், எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களும் கூட ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. நீங்கள் பார்க்கும் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. Drishti Marine-ஆல் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், நாய்கள் அமைதியாக தங்கள் உணவை பெற்று கொள்வதை பார்க்க முடிகிறது.

ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet)
புனேவை சேர்ந்த ஷிவன்யா பாண்டே என்ற பெண் தனது ராயல் என்பீல்டு பைக்கில் சென்று நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். அவருக்கு 23 வயது மட்டுமே ஆகிறது. ஒவ்வொரு நாளும் 30க்கும் மேற்பட்ட நாய்களுக்கு அவரால் உணவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பணிகளின்போது போலீசார் மற்றும் அதிகாரிகள் பிரச்னை தருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

லாக்டவுன் அமலுக்கு வந்தது முதலே ஒவ்வொரு நாளும் வெளியே சென்று நாய்களுக்கு உணவு வழங்கும் பணியை ஷிவன்யா பாண்டே மேற்கொண்டு வருகிறார். மேலும் பூனைகளுக்கும் அவர் உணவு வழங்கி கொண்டுள்ளார். தனது வீட்டிற்கு அருகே இருக்கும் பகுதிகளில் அவர் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications








