கார் கலரை மாற்றிய ஓனருக்கு ஆப்பு வைத்த போலீஸ்! இனி இதை செஞ்சு தர்றதுக்கு கடைக்காரங்க எல்லாம் பயப்பட போறாங்க!
இந்திய சட்ட திட்டங்களின்படி வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது என்பது சட்ட விரோதமானது. ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு சிலர் தொடர்ச்சியாக வாகனங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்து கொண்டுதான் உள்ளனர். இதில், ஒரு சிலர் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் சிக்கி கொள்கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஆனால் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்த நிறுவனங்கள் மீது இந்தியாவில் அதிகாரிகள் பெரிதாக நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
மாடிஃபிகேஷன் செய்வது தவறு என்றால், அதற்கு தேவையான உதிரி பாகங்களை விற்பனை செய்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? மாடிஃபிகேஷன் செய்து கொடுத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை பாய்வதில்லை? என்பது போன்ற கேள்விகளை சமூக வலை தளங்களில் பலர் எழுப்பி நாம் கேட்டுள்ளோம்.

இந்த கேள்விகளுக்கு அதிகாரிகள் தற்போது பதில் அளிக்க தொடங்கியுள்ளனர். ஆம், மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) காரை மாடிஃபிகேஷன் செய்த உரிமையாளர் மட்டுமின்றி, அதை செய்து கொடுத்த நிறுவனம் மீதும் தற்போது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் (Hyderabad) நகரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத் நகரில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி காவல் துறை அதிகாரிகள் வழக்கம் போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனால் காவல் துறை அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அந்த காரின் உரிமையாளரும், டிரைவரும் உள்ளே இருந்தனர். தொடர் விசாரணையில் அந்த காரின் உரிமையாளர், மாடிஃபிகேஷன் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது அந்த காரின் உண்மையான நிறம் வெள்ளை ஆகும். ஆனால் அந்த காரின் உரிமையாளர், வ்ராப் (Wrap) மூலம் காரின் நிறத்தை மாற்றியுள்ளார்.
ஆர்சி புத்தகத்தில் காரின் நிறம் வெள்ளை என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அனுமதி பெறாமல், வ்ராப் மூலமாக காரின் நிறத்தை மாற்றிய காரணத்தால், அந்த காரின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காரின் நிறத்தை மாற்றி கொடுத்த நிறுவனம் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டம் பிரிவு 182A(1)-ன் கீழ், அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த சட்டத்தின்படி, 1 வருட சிறை தண்டனை அல்லது 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அல்லது 2 தண்டனைகளும் ஒன்றாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தேவைப்பட்டால், வாகனத்தின் நிறத்தை மாற்றி கொள்ள அனுமதி உண்டு. ஆனால் இதற்கு அனுமதி பெற வேண்டும். அத்துடன் ஆர்சி புத்தகத்தில் மாற்றங்களையும் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே, எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
இந்த சம்பவத்தில் நடைபெற்றது என்னவென்றால், இந்த கார் வ்ராப் செய்யப்பட்டுள்ளது. அதாவது வேறு ஒரு நிறம் கொண்ட பிளாஸ்டிக் ஃப்லிம் மூலம் உண்மையான கலர் மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக காரின் நிறம் எதுவோ, அதே நிறத்தில் வ்ராப் செய்தால் பெரும்பாலும் பிரச்னைகள் ஏற்படாது.
ஆனால் முற்றிலும் வேறு நிறம் என்றால், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். எனவே வாகனங்களை மாடிஃபிகேஷன் ஷாப்களுக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, விதிமுறைகளை நன்றாக தெரிந்து கொள்வது நன்மை பயக்கும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








