சாலை விபத்தில் சிக்கிய காரின் விலை இத்தன கோடியா! போனா போகுதுனு ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆன உரிமையாளர்!
இந்தியாவில் நடைபெறும் பல்வேறு சாலை விபத்துக்களுக்கு (Road Accidents), வாகனங்களில் அதிவேகத்தில் பயணம் செய்வது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. விலை உயர்ந்த வாகனங்கள் கூட அதிவேகத்தில் பயணம் செய்வதால், அவ்வப்போது சாலை விபத்தில் சிக்குகின்றன. குஜராத் (Gujarat) மாநிலம் அகமதாபாத் (Ahmedabad) நகரில் சமீபத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் இதற்கு உதாரணம்.
அகமதாபாத் நகரில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) கார் ஒன்று சமீபத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் சிக்கிய இந்த காரின் விலை (Price) சுமார் 4.50 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிவேகத்தில் வந்த இந்த கார், சாலை தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

சம்பவம் நிகழ்ந்தபோது காரின் டிரைவர் மட்டுமே காருக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. அதுவும் விபத்து நிகழ்ந்த உடன், அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் காரின் முன் பகுதி குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளது.
நள்ளிரவு சுமார் 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரில் பல்வேறு அதிநவீன பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது இந்த கார் எப்படி கட்டுப்பாட்டை இழந்தது? என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆனால் இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.

என்னதான் பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் கூட, கார்களை கவனமாக ஓட்ட வேண்டும். குறிப்பாக செடான் (Sedan) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களை காட்டிலும், எஸ்யூவி ரக கார்களை ஓட்டும்போது கூடுதல் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில் எஸ்யூவி ரக கார்கள் கட்டுப்பாட்டை இழப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
அகமதாபாத் நகரில் விபத்தில் சிக்கிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரில், 4.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 577 பிஎஸ் பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 5 வினாடிகளில் எட்டி விடும். எனவே இது போன்ற கார்களின் டிரைவர் இருக்கையில் அமரும்போது, மிகவும் கவனமாக இருந்தால் மட்டுமே, சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும். இந்த விபத்து குறித்து, காவல் துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டும்போது தூக்க கலக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே பகல் நேரங்களை காட்டிலும், இரவு நேரங்களில் இன்னும் கவனமாக வாகனங்களை ஓட்டுவது நல்லது. இது போன்ற சமயங்களில் அதிவேகத்தில் பயணம் செய்தால், விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








