சர்வீஸ் சென்டரில் போட்ட பில்லுக்கு தலைச்சுற்றி போன ஓனர்! பென்ஸ் காரை வாங்கியது ஒரு குற்றமா?
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் கார்களை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது ஆசையாக இருக்கும். ஆனால், அதனை பணக்காரர்கள் மட்டுமே நிஜமாக்குகின்றனர். அந்த அளவிற்கு பல லட்ச ரூபாய் விலைகளில் பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி கஷ்டப்பட்டு பணத்தை கொட்டி வாங்கிய பென்ஸ் கார் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடந்த மழை நீரால் சேதமடைகிறது என்றால் எந்தவொரு உரிமையாளருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.
அப்படித்தான் இங்கு ஒருவருக்கு காரை பழுது பார்க்க சுமார் ரூ.16 லட்சம் வரையில் செலவாகி உள்ளது. அமித் கிஷோர் (Amit Kishore) என பெயர் கொண்ட இந்த பணக்காரர் மற்றும் சமூக ஆர்வலர் உத்தர பிரதேச மாநில காசியாபாத்தில் வசித்து வருகிறார். இவரிடம் சிவப்பு நிறத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.ஏ (GLA) கார் ஒன்று உள்ளது.

கடந்த ஜூலை 23ஆம் தேதி அமித் கிஷோர் (Amit Kishore) காசியாபாத்தில் சாலை ஒன்றில் கொட்டும் மழைக்கு நடுவே தனது ஜிஎல்ஏ காரில் சென்றுக் கொண்டிருந்த நிலையில், ஷ்யாம் பார்க் எண்டென்ஷன் பகுதியில் சென்ற போது கார் நடுவழியில் பிரேக்-டவுன் (Brokedown) ஆகி நின்றுள்ளது. இதுதான் சுமார் ரூ.16 லட்சம் வரையிலான செலவை இழுத்துவிட்டுள்ளதாக லோகேஷ் ராய் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தேங்கி கிடந்த மழைநீரில் சென்றதால் கார் பிரேக்-டவுன் ஆன நிலையில், நேரம் போக போக கனமழை வெளுத்து வாங்க ஆரம்பித்து நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. அமித் கிஷோர் உடனே காரை கொண்டு செல்ல ஒரு வாகனத்தை புக் செய்த போதிலும், அந்த வாகனம் வருவதற்குள் சாலையில் தேங்கிகிடந்த மழைநீர் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

பின்னர் ஒருவழியாக உதவிக்கு வந்த வாகனத்தில் ஏற்றி நொய்டாவில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் சர்வீஸ் செண்டருக்கு காரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பணியாளர்கள் ஆராய்ந்து பார்த்து, ரூ.16 லட்சம் வரையில் செலவு ஆகும் என பெரிய இடியை அமித் கிஷாரின் தலையில் இறக்கி உள்ளனர். இதனையடுத்து, அமித் கிஷோரின் கோபம் அப்படியே காசியாபாத் மாநகராட்சி மீது திரும்பி உள்ளது.
நேரடியாக காசியாபாத் மாநகராட்சி ஆணையருக்கே சட்டப்பூர்வமான அறிக்கையை அமித் கிஷோர் விடுத்துள்ளார். இந்த அறிக்கையில், காருக்கு ஆன ரூ.16 லட்சம் செலவு உள்பட, தனது மன துன்புறுத்தலுக்காக கூடுதலாக ரூ.5 லட்சத்தை நஷ்ட ஈடாக அமித் கிஷோர் கேட்டுள்ளார். மேலும், மழைக்காலத்தில் முறையாக மழைநீர் வடிகால் அமைப்பை பராமரிக்காததற்காக காசியாபாத் மாநகராட்சியை அமித் கிஷோர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்த அறிக்கைக்கு 15 நாட்களுக்குள் பதில் வரவில்லை எனில் மாநகராட்சி மீது பொதுநல வழக்கு தொடரப்படும் என்றும் அமித் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவரிடம் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.ஏ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) தற்சமயம் ரூ.64.62 லட்சத்தில் இருந்து ரூ.71.13 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தவறு யார் செய்தால் என்ன? என அரசாங்கத்தை எதிர்த்து கேள்விக் கேட்கும் அமித் கிஷோரின் துணிச்சல் அருமையாக உள்ளது. இவ்வாறு மக்கள் கேள்வி கேட்டால் தான் அரசாங்க சக்கரம் சரியாக சுழலும். அதேநேரம், காருக்கு ரூ.16 லட்சம் வரையில் செலவாகுமா என்பதையும் ஒருமுறைக்கு இருமுறை உறுதிச் செய்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








