நாட்டின் தலைநகர் பகுதியில் பல் இளிக்கும் சாலைகள்... நம்ம சென்னை எவ்வளவோ பரவாயில்லை!!
மழைக்காலம் இந்தியாவின் பல இடங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, வட இந்திய மாநிலங்கள் கனமழையினால் தத்தளித்து வருகின்றன. டெல்லி என்சிஆர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பு முறையாக இல்லாததினால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்த செய்திகளை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தலைநகர் டெல்லி மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் நிலைமை இதுதான். டெல்லிக்கு அருகாமையில் உள்ள அத்தகைய நகரங்களில் ஒன்று, குருக்கிராம் ஆகும்.
ஹரியானா மாநிலத்தின் தலைநகரும், மெட்ரோ சிட்டியுமான குருக்கிராமில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையினால் குருக்கிராமில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதுடன், வாகனங்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனை வெளிக்காட்டும் வகையில், குருக்கிராமில் வசிக்கும் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

குருக்கிராமின் பகுதி 57-இல் வசிக்கும் இந்த நபர், வெறும் 1 மணிநேர மழைக்கு தனது வீட்டை சுற்றி அனைத்து பகுதிகளும் மழைநீரால் சூழப்பட்டுள்ளதாகவும், மழைநீர் வடிகால் அமைப்பு அடைப்பட்டு உள்ளதாகவும் தனது எக்ஸ் வீடியோவில் தெரிவித்துள்ளார். இதனால், வீட்டில் மற்றும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார்கள் மழைநீரில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவில், அந்த நபரது வீட்டில் பிஎம்டபிள்யூ எம்340ஐ காரை பார்க்க முடிகிறது. காரின் சக்கரங்கள் முழுவதுமாக மழைநீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக, காரின் எலக்ட்ரிக்கல் சிஸ்டம் சேதமடைந்திருப்பதை வெளிக்காட்டும் விதமாக காரின் வைபர்கள் தானாக செயல்படுவதை பார்க்க முடிகிறது. சக்கரங்கள் மட்டுமின்றி, காரின் க்ரில், ஹெட்லேம்ப்களும் மழைநீரில் மூழ்கியுள்ளதை காணலாம்.

இதனால், காரினுள் மழைநீர் புகுந்திருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. பிஎம்டபிள்யூ எம்340ஐ கார் மட்டுமின்றி, வீடியோவை பதிவிட்டவரின் வீட்டிற்கு வெளியே மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் என்கிற லக்சரி செடான் காரையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. வீடியோவில் காட்சி தருவது சி-கிளாஸ் காரின் டபிள்யூ204 வெர்சன் ஆகும். பிஎம்டபிள்யூ காரை போன்று, இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரும் மழைநீரில் பாதி மூழ்கி கிடக்கிறது.
வீடியோவில், இந்த பென்ஸ் காருக்கு முன்னால் ஹூண்டாய் ஐ20 என் லைன் ஹேட்ச்பேக் காரையும் பார்க்கலாம். இந்த நபரது வீடு, விலையுயர்ந்த கார்களை மழைநீர் முற்றிலுமாக சூழ்ந்துள்ளது. இதனால், இந்த நபரால் வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை என இந்த நபர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
நீர் தேங்கிய சாலையில் வாகனத்தை ஓட்டி செல்வது பழுதை உண்டாக்க கூடியது ஆகும். குறிப்பாக, கார் & பைக்குகள் மழைநீரால் அதிக சேதாரங்களை சந்திக்கின்றன. பாதிப்புகளை உடனடியாக உணர முடியாவிடினும், கார், பைக்குகளை தொடர்ந்து மழைநீரில் கொண்டு செல்லும்போது உங்களுக்கே தெரியாமல் உங்களது வாகனங்களில் பழுதுகள் ஏற்படுகின்றன. சில பழுதுகள் வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென வேலையை காட்ட துவங்கும்.
ஆதலால், மழைநீர் தேங்கிய சாலைகளில் முடிந்தவரையில் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டாம். வேறு வழியில்லை எனும்போது, அத்தகைய சாலைகளில் மெதுவாக வாகனங்களை ஓட்டி செல்லவும். வாகனத்தின் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் ஏர் இண்டேக்கை மழைநீர் மூழ்கடிக்கிறது என்றால், இன்னும் கவனமாக செயல்படவும். அத்தகைய பகுதிகளில் 2-வீலர்களை ஓட்டாமல் தள்ளிக் கொண்டு செல்வது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேட்க கசப்பாக இருந்தாலும், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மழைநீர் வடிக்கால் அமைப்பானது முறையாக செயல்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். உதாரணத்திற்கு நமது சென்னையில் கூட ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு பல்லிளிக்கிறது. ஆதலால், முடிந்தவரையில் வாகனங்களை அவ்வப்போது பராமரித்து சரியான தரத்தில் வைத்திருக்கவும்.


Click it and Unblock the Notifications








