பணியாளர்கள் இல்லை... கார்கள் மூலமாக டெலிவிரி பணியை துவங்கும் பிளிப்கார்ட்...
முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் அத்தியாவசிய பொருட்களை வாடிக்கையாளர்களிடம் டெலிவிரி செய்வதற்காக மும்பையை சேர்ந்த மெரு கேப்ஸ் என்ற நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தற்சமயம் நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையில் தினந்தோறும் தேவைப்படும் பொருட்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது மிகவும் சவாலான பணியாக உள்ளது. ஏனெனில் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

அதிலும் இணையம் மூலமாக பொருட்களை விற்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் கூடுதலாக பணியாளர்கள் பற்றாக்குறையிலும் தவித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இதனை சமாளிக்க விதமாக பிளிப்கார்ட் நிறுவனம் மஹாராஷ்டிராவை சேர்ந்த மெரு கேப்ஸ் நிறுவனத்துடன் டெலிவிரி பணிகளுக்காக கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

மெரு கேப்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா ப்ரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் பின்னணியில் இயங்கும் அப்ளிகேஷன் சார்ந்த கேப் நிறுவனமாகும். இதன் மூலமாக விரைவாக பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க இயலும் என பிளிப்கார்ட் நிறுவனம் கணித்துள்ளது.

முதற்கட்டமாக இந்த கேப் டெலிவிரி பணிகள் பெங்களூர், டெல்லி என்ஆர்சி மற்றும் ஹைதாராபாத் போன்ற நகரங்களில் கொண்டுவரப்படவுள்ளன. இதுகுறித்து மெரு மொபைலிட்டி டெக் லிமிடேட் நிறுவனத்தின் சிஇஒ-வும் நிறுவனருமான நீராஜ் குப்தா கூறுகையில், மெரு நிறுவனம் தனது கேப் கார்களை பிளிப்கார்ட்டின் பெரிய வாடிக்கையாளர்கள் தளத்திற்கு அத்தியாவசிய பொருட்களை விரைவாகவும் பாதுகாப்பவும் டெலிவிரி செய்யும் பணிகளில் உட்படுத்தவுள்ளது.

இதன் மூலமாக தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் கார் ஓட்டுனர்கள் கணிசமான வருவாயை ஈட்ட முடியும் என நம்புகிறோம் என கூறினார். அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி, மெரு நிறுவனம் சுத்தகரிக்கப்பட்ட கார்களை இந்த டெலிவிரி பணியில் ஈடுப்படுத்தவுள்ளது.

இதனால் டெலிவிரி பணியில் ஈடுப்படவுள்ள கார்களை நிறுத்தி வைக்கும் மையங்களில் ‘ஓசோன் காற்று சுத்திகரிப்பான்' பொருத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கார் ஓட்டுனர்களுக்கு மாஸ்க், கையுறை போன்ற பாதுகாப்பு கவசங்களும் வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பிளிப்கார்ட் நிறுவனமும் தனது பங்கிற்கு பொருட்களை விரைவாகவும் அதேநேரம் பாதுகாப்பாகவும் எடுத்து செல்வது குறித்த வகுப்புகளையும் ஒட்டுனர்களுக்கு வழங்கவுள்ளது. பிளிப்கார்ட் க்ரூப்பின் சிஇஒ, கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், பொருட்களை பாதுகாப்பாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணிகளில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் ஈடுப்படவுள்ளோம்.

கொரோனா வைரஸிற்கு எதிராக நாட்டுடன் இணைந்து செயல்பட்டு வருவதால் எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என கூறினார். இந்திய அரசாங்கமும் வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாய் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால் பிளிப்கார்ட்-மெரு நிறுவனங்களின் கூட்டணி நிச்சயம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும்.


Click it and Unblock the Notifications








