சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழர் பற்றிய சுவாரஸ்ய கதை!
சொந்தமாக ரயில் வாங்கி பயன்படுத்திய தமிழர் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சொந்த பயன்பாட்டிற்காக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்பது வழக்கம். பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தங்களது வசதிக்காக பஸ்சை கூட கஸ்டமைஸ் செய்து பயன்படுத்துகின்றனர்.

சிலர் விமானத்தை கூட வாங்கி பறக்கும் அலுவலகமாகவும் உபயோகிக்கின்றனர். இதெல்லாம் சகஜமான விஷயம்தான். ஆனால், சொந்தமாக ரயிலை பயன்படுத்துவது என்பது கேள்விப்படாத விஷயம்.
Picture Credit: Indian Railway

ஆனால், ஒருவர் சொந்தமாக ரயிலை வாங்கி பயன்படுத்தினார் என்ற செய்தி வியப்பை தரும் விஷயம்தான். அதிலும், அவர் தமிழர் என்பது கூடுதல் வியப்பை அளிக்கும் விஷயம். ஆம், இந்தியாவிலேயே சொந்தமாக ரயிலை வாங்கி பயன்படுத்திய தமிழரை பற்றிய சுவாரஸ்ய செய்தித் தொகுப்பை இந்த செய்தியில் படிக்கலாம்.
Picture Credit: Indian Railway

18ம் நூற்றாண்டில் சென்னையை சேர்ந்த நம் பெருமாள் செட்டியார் என்ற பிரபலமான கட்டுமான அதிபர்தான் சொந்தமாக ரயிலை வாங்கி பயன்படுத்தி இருக்கிறார். சென்னையில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பல சிறப்பு வாய்ந்த பாரம்பரிய கட்டடங்களை உருவாக்குவதற்கு ஆணிவேராக இருந்தவர்தான் இந்த நம் பெருமாள் செட்டியார்.
Picture Credit: Wiki Commons

சென்னையிலுள்ள சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக்கலை கல்லூரி, கன்னிமாரா நூலகம், பாரிமுனையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கட்டடம் என சென்னையின் பாரம்பரிய அடையாளச் சின்னங்களாக உள்ள பல சிவப்பு நிற கட்டடங்களை கட்டிய பில்டிங் கான்ட்ராக்டர்தான் நம் பெருமாள் செட்டியார்.

ஆங்கிலேயர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க இந்தியராக விளங்கிய இவர், செல்வ செழிப்பில் மிதந்தார். எழும்பூர் பாந்தியன் சாலையில் இருந்து ஹாரிங்டன் சாலை வரை உள்ள இவருக்கு சொந்தமான நிலப்பரப்பு பின்னாளில் செட்டியார் பேட்டை என்று அழைக்கப்பட்டது. இந்த பெயர் காலப்போக்கில் மருவி இப்போது சேத்துப்பட்டு என்று மாற்றம் கண்டிருக்கிறது.
Picture Credit: Wiki Commons

இந்தியாவில் பணியாற்றிய செல்வாக்கு மிக்க ஆங்கிலேய அதிகாரிகள் பலர் கார்களை இறக்குமதி செய்து பயன்படுத்தினர். இந்த சூழலில் முதல் கார் வாங்கிய இந்தியர் என்ற பெருமை சென்னையை சேர்ந்த நம் பெருமாள் செட்டியாருக்கு உண்டு. எம்சி-3 என்ற காரை வாங்கி பயன்படுத்தினார்.

இந்தியாவில் முதல் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமை என்பது சென்னைக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான். அதுமட்டுமல்ல, இவர் சொந்தமாக ரயில் ஒன்றை வாங்கி பயன்படுத்தியதுதான் பெருமைக்கும் பெருமை சேர்த்த விஷயம்.
Picture Credit: Wiki Commons

நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயிலை இவர் வாங்கி பயன்படுத்தினார். வீட்டிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதற்கு இந்த ரயிலை அவர் பயன்படுத்தினார்.
Picture Credit: Wiki Commons

மற்ற நேரங்களில் இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கல்வி, கோயில் திருப்பணிகள், மருத்துவமனைகளுக்கு தான் சேர்த்த செல்வங்களை வாரி வழங்கி வள்ளல் என்ற பெருமைக்குரியவராகவும் விளங்கினார்.
Picture Credit: Wiki Commons

கணித மேதை ராமானுஜம் நோய்வாய்ப்பட்டு உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில், அவருக்கு தனி அறை, தனி சமையல் வசதிகளை செய்து கொடுத்து அவரை நோயிலிருந்து காப்பாற்ற நம் பெருமாள் செட்டி பெரும் சிரத்தை எடுத்தார். ஆனால், அதற்கு பலனளிக்காமல் அவர் இறந்தபோது இறுதி காரியங்கள் வரை செய்தவர் இந்த நம்பெருமாள் செட்டியார்தான்.
Picture Credit: Wiki Commons

சென்னையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய நம் பெருமாள் செட்டியின் வீடு தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுவிட்டது. நம் பெருமாள் செட்டி கட்டிய கட்டடங்கள் இன்று சென்னையின் பாரம்பரியத்தை உலக அளவில் பரைசாற்றி நிற்கின்றன.

நம் பெருமாள் செட்டியார் சொந்தமாக ரயில் வைத்திருந்த சுவாரஸ்யமான கதை தமிழனின் பெருமையை பரைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








