மகளிருக்கான ரூ.1000 வழங்கும் திட்டத்தையே ஒன்னுமில்லா ஆக்கிருச்சு இந்த அறிவிப்பு! குஷியில் கோவை, மதுரைவாசிகள்!
தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இது ஆகும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் என பல்வேறு முக்கிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துடன் சேர்த்து இன்னும் பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. குறிப்பாக, யாரும் எதிர்பார்த்திராத அறிவிப்பான கோவை மற்றும் மதுரை மாநகர்களுக்கான மெட்ரோ ரயில் சேவை திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

கோயம்பத்தூரில் ரூ. 9 ஆயிரம் கோடி செலவிலும், மதுரையில் ரூ. 8,500 கோடி செலவிலும் மெட்ரோல் ரயில் சேவை பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. தொழில்துறையின் முக்கிய நகரமாக கோவை வளர்ந்துக் கொண்டிருக்கின்றது. சென்னைக்கு அடுத்தபடியாக ஐடி, மருத்துவம், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் ஜவுளி என அனைத்து துறைகளிலும் மிக வேகமாக கோவை மாநகர் வளர்ந்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நகரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலேயே கோவைக்கான மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இந்த செய்தி கோவை வாசிகள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கோவை அவிநாசி சாலை தொடங்கி சத்தியமங்கலம் வரை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட இருக்கின்றது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தொன்மையான நகரமான மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவைத் தொடங்கப்பட இருக்கின்றது. திருமங்கலம் - ஒத்தக்கடை ஆகிய பகுதிகளிக்கு இடையிலேயே மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட இருக்கின்றது. நிலத்துக்கு அடியில் செல்லும் வகையிலான மெட்ரோ ரயில் சேவையே இங்கு அமைக்கப்பட இருக்கின்றது.
இது தென்னகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உதவியாக அமையும் என அரசு அறிவித்து இருக்கின்றது. இதுதவிர, 2025ஆம் ஆண்டிற்குள் தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தை விரைந்து முடிக்கும் முயற்சியிலும் அரசு தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

63,246 கோடி ரூபாய் செலவில் 119 கிமீ தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில், பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையில் அமைக்கப்பட்டு வரும் வழித்தடம் 2025 டிசம்பருக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.
இதற்காக இந்த பட்ஜெட்டின் வாயிலாக ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 1,407 கோடி ரூபாய் செலவில் 148 கிமீட்டருக்கு சாலைகளை நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை புதிதாக நான்கு வழி பாலம் அமைக்கப்பட இருக்கின்றது. இந்த பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இந்த புதிய மேம்பாலம் ரூ. 621 கோடி மதிப்பீட்டில் இந்த நான்கு வழி மேம்பாலம் அமைக்கப்பட இருக்கின்றது.
இத்துடன், வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடில் உள்ள பேருந்து பணிமனைகள் தற்காலத்திற்கு ஏற்ப மேம்படுத்த ரூ. 1,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும், 1000 புதிய பேருந்துகலை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆகையால், சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் விரைவில் பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிராமங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் விதமாகவும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 5,145 கிமீ சாலைகளை மேம்படுத்தப்பட இருக்கின்றன. இதற்காக ரூ. 2000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications