வாடகை எலக்ட்ரிக் பைக், சார்ஜிங் ஸ்டேஷன்கள்! சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் புது வசதிகள்!
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட உள்ளன. அத்துடன் எலக்ட்ரிக் பைக்குகளும் வாடகைக்கு விடப்படவுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட உள்ளன. அத்துடன் எலக்ட்ரிக் பைக்குகளும் வாடகைக்கு விடப்படவுள்ளன. பயணிகளை கவரவும், எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காகவும் அறிமுகம் செய்யப்படவுள்ள இத்தகைய புதிய வசதிகள் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவில் போதிய சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் இருக்கும் மிகப்பெரிய பின்னடைவு இதுதான்.

வாகனங்களில் சென்று கொண்டிருக்கையில் பெட்ரோல், டீசல் திடீரென தீர்ந்து விட்டால், உடனடியாக பங்க்கை கண்டுபிடித்து விடலாம். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களில் சென்று கொண்டிருக்கையில் சார்ஜ் தீர்ந்து விட்டால், எதுவும் செய்ய முடியாது.

ஒருவேளை சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருந்தால், சிறிது நேரத்தில் சார்ஜ் செய்து விட்டு கிளம்பி விடலாம். ஆனால் இந்தியாவில் போதிய அளவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை. எனவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில், மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது.

மக்கள் மத்தியில் உள்ள இந்த தயக்கத்தை போக்க, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது ஒவ்வொரு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. பயணிகள் தங்களின் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளுக்கு இங்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்காக, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திடம், சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிலையான சார்ஜிங் போர்ட்களை அமைத்து விடும். இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை, பவர் கிரிட் கார்ப்பரேஷனே பராமரித்து கொள்ளும். அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களாலும் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும்.

சென்னை நகரின் பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்களில், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சார்ஜிங் ஸ்டேஷன்களிலும் ஒரே நேரத்தில், குறைந்தபட்சம் 10 எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் 5 எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.

சார்ஜிங் ஸ்டேஷன்களை பயன்படுத்தி கொள்ள கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் சென்னை மெட்ரோ ரயிலை போன்று அதிக கட்டணம் வசூலிக்கப்படுமா? என்று அச்சம் கொள்ள வேண்டாம். பெயரளவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. எனவே கட்டணம் மிகவும் குறைவாகதான் இருக்கும்.

முன்னதாக திருமங்கலம் மற்றும் ஏர்போர்ட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில், வாடகை பைக் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்கூட்டி பெப் பிளஸ் முதல் ஹார்லி டேவிட்சன் பைக் வரை பயணிகள் வாடகைக்கு எடுக்க முடியும். பைக்குகளை வாடகைக்கு எடுக்கும்போது, 2 ஆயிரம் ரூபாயை டெபாசிட்டாக செலுத்தி விட வேண்டும்.

பின்னர் பைக்குகளை ஏதேனும் ஒரு ஸ்டேஷன் அல்லது பைக்கை வாடகைக்கு விடும் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, டெபாசிட் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.

தற்போது எலக்ட்ரிக் பைக்குகளை வாடகைக்கு வழங்கும்படியும், அந்த நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி'-க்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








