வேகமெடுக்கும் கோவிட்-19... ஊழியர்களுக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் செய்யும் நல்ல காரியம்... என்னனு தெரியுமா?
ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் நோயாளிகள் பலர் தவித்து வருகின்றனர். அத்துடன் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ள பலர் ஆர்வமாக முன்வந்தாலும், போதிய அளவில் கையிருப்பு இல்லை.

இந்த சூழலில், தனது ஊழியர்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளை தொடங்கியிருப்பதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் நேற்று (மே 5) தெரிவித்துள்ளது. குர்கான், ஹலோல் மற்றும் தனது பிராந்திய அலுவலகங்கள் உள்ள பகுதிகளை சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து, தனது ஊழியர்களுக்கு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தடுப்பூசி செலுத்துகிறது.

குர்கான் நகரில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகமும், ஹலோல் பகுதியில் அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையும் இயங்கி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது என்பதும் கவனித்தக்க விஷயமாகும்.

இது தொடர்பாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜிவ் சாபா ட்வீட் செய்துள்ளார். அதில், ''நல்ல தொடக்கம். எங்களது தொழிற்சாலையில் நடைபெற்ற முதலாவது தடுப்பூசி தினத்தில் எங்களது ஊழியர்கள் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. உள்ளூரை சேர்ந்த சுகாதார துறை அதிகாரிகளுக்கு நன்றி'' என கூறியுள்ளார்.

தடுப்பூசிதான் கோவிட்-19 வைரஸை நாம் வெல்வதற்கான ஆயுதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி தடுப்பூசி கிடைக்காமல் பலர் தற்போது தடுமாறி வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில், முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வரிசையில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு இலவசமாக கோவிட்-19 தடுப்பூசியை செலுத்தும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு, அதன் ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்ட்டர் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த கார்கள் அனைத்திற்கும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் ஏற்கனவே இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனை செய்து வரும் நிலையில், வரும் காலங்களில் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அதற்கேற்ப தற்போதே சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் பணிகளிலும் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








