ஓர் இந்திய குடும்பத்துக்கு இப்படியொரு தைரியமா!! 73 வருடம் பழமையான காரில் செய்துவரும் காரியம் - இன்னும் தொடருது
சுமார் 73 ஆண்டுகள் பழமையான எம்ஜி காரில் சாலை வழியாக நம் இந்தியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று லண்டனை நோக்கி பயணம் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 16 நாடுகளை கடந்து எதற்காக இந்த பயணம்? யார் அந்த இந்திய குடும்பம்? என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி, உலகளவில் சாலை வழியாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மொபைல் போன்களின் ஆதிக்கம் உலகம் முழுவதும் அதிகமான பிறகே பலர் இவ்வாறான பயணங்களை அதிகளவில் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஏனெனில், உலகின் எந்தவொரு பகுதி குறித்த விபரங்களையும் மொபைல் போன் மூலமாக உள்ளங்கையில் பெற்றுவிட முடிகிறது.

அதுமட்டுமின்றி, எந்தவொரு நேரத்திலும் உதவிக்கு ஆட்களை அழைக்க முடியும் என்கிற தைரியத்தில் பலர் நீண்ட தூர பயணங்களை அவ்வப்போது தங்களது வாகனங்களில் மேற்கொள்கின்றனர். அதிலிலும், சாலை வழியாக உலகம் முழுவதையும் சுற்றி வருபவர்களும் இருக்கின்றனர். அத்தகையவர்களை சமூக வலைத்தளங்களில் பரவலாக பார்க்க முடியும்.
ஆனால் இங்கு ஒரு குடும்பமே இந்தியாவில் இருந்து இங்கிலாந்தின் இலண்டனுக்கு காரில் பயணித்து வருகிறது. இந்தியாவின் அகமதாபாத்தை சேர்ந்த இந்த குடும்பத்தின் இலண்டனை நோக்கிய பயணம் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் துவங்கியது. சுமார் 12,000 கிமீ தொலைவிற்கு, 16 நாடுகளை கடந்து இந்த குடும்பம் தனது தொலைத்தூர பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

பொதுவாக இவ்வாறான மிக நீண்ட தூர பயணத்தை தனியாளாகவோ அல்லது இருவராகவோ தான் பெரும்பாலானோர் மேற்கொள்வர். ஆனால் இவர்கள் 5 நபர்களாக, ஒரு குடும்பமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஹைலைட் என்னவென்றால், இவர்கள் இந்த பயணத்தில் பயன்படுத்தி இருப்பது சுமார் 73 ஆண்டுகள் பழமையான 1950 எம்ஜி விண்டேஜ் காரை ஆகும். இந்த விண்டேஜ் காரை லால் பரி (சிவப்பு தேவதை) என இவர்கள் அழைக்கின்றனர்.
இப்படியொரு கார் இருந்தாலும், கூடுதல் பாதுகாப்பிற்கு வேன் ஒன்றையும் உடன் கொண்டு சென்றுள்ளனர். ஏனெனில் 1950 எம்ஜி விண்டேஜ் காருக்கு மேற்கூரை எதுவும் கிடையாது. அதனை ஜாலியாக பயணம் செய்வதற்கு வேண்டுமாயின் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றப்படி, அகமதாபாத் - இலண்டனுக்கு சாலை வழியாக செல்ல ஆகும் பல மாதங்களுக்கு அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்ள ஒரு வாகனமோ அல்லது இடமோ தேவை.

முக்கியமாக, இவர்கள் ஐந்து பேரும் ஊர் பேர் தெரியாத ஊரில் உறங்குவதற்கு ஒரு பாதுகாப்பான இடம் முக்கியம். இந்த பயணம் இலண்டனில் நிறைவடைய ஏறக்குறைய 60 நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பழமையான கார்களை அதிவேகத்தில் இயக்க முடியாது. இந்த 1950 எம்ஜி விண்டேஜ் காரை சராசரியாக மணிக்கு 35கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க முடிவதாகவும், இதனால் ஒரு நாளைக்கு 200இல் இருந்து 250கிமீ தொலைவை மட்டுமே கடக்க முடிவதாகவும் இந்த அகமதாபாத் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஒவ்வொரு நாளும் 6-இல் இருந்து 8 மணிநேரங்கள் பயணம் செய்வதாக தெரிவித்துள்ள இவர்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கி உள்ள கேரவனுக்கு லால் பரி கி சஹேலி (சிவப்பு தேவதையின் நண்பர்) என பெயர் வைத்துள்ளனர். இந்த குடும்பத்தின் நீண்ட தூர பயணத்திற்காக 1950 எம்ஜி விண்டேஜ் காரை விண்டேஜ் கார்களை வடிவமைப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் வடிவமைத்து கொடுத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான மிக தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என நம்மில் பலருக்கு ஆசை இருக்கும். அதனை இந்த குடும்பத்தினர் பழமையான காரில் சாத்தியமாக்கி வருகின்றனர். பழமையான கார்களை தற்காலத்தில் பயன்படுத்துவது எப்போதுமே இருமுனை கத்தி போன்றது. ஏனெனில் சாலையில் போகும்போது ஜாலியாகவும், கெத்தாகவும் இருக்கும். ஆனால், கார் பழுதாகி நின்றால் அதனை சரி செய்வதற்குள் தலைவலியே வந்துவிடும்.
Image Courtesy: Daman Thakore


Click it and Unblock the Notifications
