டயர்களின் விலையை 8 சதவீதம் வரை உயர்த்தும் பிரபல நிறுவனம்... சீக்கிரம் வாங்கிக்கோங்க குறைந்த நாட்களே உள்ளன...
பிரபல டயர் உற்பத்தி நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்து வரும் பிரபல நிறுவனம் வருகின்ற மார்ச் மாதம் முதல் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. ஃபிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மிஷ்லின் நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்ட டயர் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் விலையைக் காட்டிலும் 8 சதவீதம் வரை விலையை உயர்த்த இருப்பதாக மிஷ்லின் அறிவித்திருக்கின்றது. இந்த விலையுயர்வு வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்தே அமலுக்கு வரவிருக்கின்றது.

ஆகையால், அதன் வாடிக்கையாளர்களால் இந்த மாதம் வரை பழைய விலையில் டயர்களை வாங்கிக் கொள்ள முடியும். கடந்த சில வாரங்களே விலையுயர்வை பற்றிய தகவலே அதிகம் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

முன்னதாக இதுகுறித்த அறிவிப்புகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே அறிவித்து வந்தநிலையில் தற்போது டயர் உற்பத்தி நிறுவனமும் இந்த வரிசையில் இணைய தொடங்கியிருக்கின்றது. இதற்கான ஆரம்ப புள்ளியையே மிஷ்லின் தற்போது போட்டிருக்கின்றது.

இந்த திடீர் விலையுயர்வு அறிவிப்பிற்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் என்ன காரணம் கூறியதே அதே காரணத்தையே மிஷ்லின் நிறுவனம் கூறியிருக்கின்றது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதையே வாகன உற்பத்தி நிறுவனங்கள் காரணம் காட்டின. இதையேதான் டயர் உற்பத்தி நிறுவனம் மிஷ்லினும் கூறியிருக்கின்றது.

இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றில் விலையுயர்வு நடவடிக்கையை மேற்கொள்ள மிஷ்லின் திட்டமிட்டிருக்கின்றது. நிறுவனம், இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்களுக்குமான டயர்களையும் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

உலக நாடுகள் பலவற்றில் உற்பத்தி ஆலையை நிறுவி இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. மேலும், 170க்கும் அதிகமான நாடுகளில் தன்னுடைய வர்த்தகத்தை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இந்நிறுவனத்தின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் கிளெர்மோண்ட்-ஃபெர்ராண்ட் எனும் பகுதியிலேயே இயங்கி வருகின்றது.


Click it and Unblock the Notifications








