உலகின் மிகப்பெரிய விமானத்தை தயாரிக்கும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலன்... ஏன்?
உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்றை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பால் ஆலன் உருவாக்கி வருகிறார். இந்த விமானத்தை தயாரிப்பதற்காக அரசு நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி வாங்கப்பட்டு, தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த விமானத்தின் தரை சோதனை ஓட்டங்களும், அதனைத் தொடர்ந்து பறக்க வைத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட உள்ளன.
இந்த விமானத்தை பால் ஆலன் தயாரிப்பதற்கான காரணம் என்ன, அதனால் விளைய இருக்கும் பயன் உள்ளிட்டவற்றையும், விமானத்தின் பிரம்மாண்டத்தையும் ஸ்லைடரில் காணலாம்.

விமானத்தின் பெயர்
கடந்த 2011ம் ஆண்டு இந்த விமானத் திட்டத்தை பால் ஆலன் அறிவித்தார். பூமியின் எதிர்பார்ப்புகளை விஞ்சியதாக இந்த விமானம் இருக்கும் என்றும் ஆலன் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது ஸ்ட்ரேட்டோலான்ச் என்ற பெயரில் இந்த விமானத் திட்டம் அழைக்கப்படுகிறது.

பிரம்மாண்டம்
இந்த விமானமானது கால்பந்து மைதானத்தைவிட சற்று பெரியதாக இருக்குமாம். அதாவது, இதன் இறக்கைகளின் அகலம் 385 அடி நீளம் கொண்டதாக இருக்கும். இந்த விமானத்தில் 28 சக்கரங்களை கொண்டிருக்கும்.

வயரிங்
இந்த விமானத்தில் மொத்தம் 96 கிமீ நீளத்திற்கு இணையான நீளமுடைய ஒயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தில் முழமையாக சரக்கு ஏற்றும் பட்சத்தில் 1.3 மில்லியன் பவுண்ட் எடை கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்கள்
இந்த ராட்சத விமானத்தில் போயிங் 737 விமானத்தில் பயன்படுத்தப்படும் 6 எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின்கள் போதுமான சக்தியை இந்த விமானத்திற்கு வழங்கும். அதுசரி, இந்த விமானத்தை ஆலன் எதற்கு தயாரிக்கிறார் தெரியுமா?

ராக்கெட் தயாரிப்பு
பால் ஆலன் விண்வெளி ஆய்வில் அதிக ஆர்வம் கொண்டவர். எனவே, விண்வெளிக்கு செயற்கைகோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்டை உருவாக்கி வருகிறார். அதற்கும் இந்த விமானத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்கிறீர்களா?

சம்பந்தம் இருக்கே...
இந்த பிரம்மாண்ட விமானத்தில் ராக்கெட்டை எடுத்துச் சென்று, அதனை 35,000 அடி உயரத்தில் வைத்து விண்ணில் செலுத்துவதற்கு பால் ஆலன் மற்றும் இந்த விமான தயாரிப்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை Air Launch என்று குறிப்பிடுகின்றனர்.

தயாரிப்புப் பணிகள்
தற்போது இந்த விமானத்தை தயாரிப்பதற்கான 76 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமானத்தில் எடுத்துச் சென்று ராக்கெட்டை ஏர் லான்ச் நுட்பத்தில் ஏவும்போது, செயற்கைகோள்களை செலுத்துவதற்கான செலவு குறையும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராக்கெட் பணிகள்
பால் ஆலனின் வல்கன் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புதிய ராக்கெட்டை வடிவமைத்து வருகிறது. அந்த ராக்கெட்டை இந்த தசாப்தத்தின் இறுதியில், அதாவது, 2020ம் ஆண்டிற்குள் விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த ராக்கெட் செலுத்துவதற்கு முன்னர் ஸ்ட்ரேட்டோலான்ச் விமானத்தை முழ அளவில் பயன்பாட்டுக்கு உகந்ததாக தயாராகிவிடும்.

வர்த்தக வாய்ப்பு
அமெரிக்காவில் விண்வெளிக்கான ராக்கெட் தயாரிப்பில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவை குறைந்த செலவில், புதிய நுட்பங்களை கையாண்டு ராக்கெட்டுகளை ஏவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எதிர்காலத்தில் செயற்கைகோள் அனுப்பும் தொழிலில் நல்ல வர்த்தக வாய்ப்பு இருப்பதை கருதியே, தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு இறங்கியிருக்கின்றன.

கடும் போட்டி
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அமேஸான் நிறுவனரின் புளூ ஆரிஜின் நிறுவனம் போன்றவை ராக்கெட்டுகளையும், விண்வெளி ஓடங்களையும் தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன. அதேபோன்று, பால் ஆலனும் தற்போது ராக்கெட் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications








