ராபிடோ ஓட்டுனராக, மைக்ரோசாஃப்ட் பொறியியலாளர்!! இந்த காரணத்தை எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்!
மைக்ரோசாஃப்ட் பொறியியலாளர் ஒருவர் ராபிடோவில் ஓட்டுனராக பணியாற்றும் சுவாரஸ்யமான விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் அவர்? எதற்காக இந்த வேலையை பார்த்து கொண்டிருக்கிறார் என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் ஆன்லைன் கேப் மற்றும் பைக்-டாக்சி சேவைகள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. நம் நாட்டில், கிராமப்புற பகுதிகளில் பெரிய அளவில் இல்லையென்றாலும், மக்கள் அடர்த்தி மிகுந்த மாநகரங்களில் இத்தகைய ஆன்லைன் டாக்சி சேவைகள் பொது போக்குவரத்திற்கு இணையாக வளர்ச்சி கண்டுள்ளன.

இதற்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு கிட்டத்தட்ட அனைவரிடத்திலும் உள்ளதை ஒரு காரணமாக கூறினாலும், இதனை காட்டிலும் இத்தகைய சேவைகளுக்கு ஓட்டுனர்கள் எளிதாக கிடைப்பதை முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். இதன் காரணமாக ஓலா, ராபிடோ போன்ற டாக்சி சேவைகள் இந்தியாவின் மாநகரங்களில் எல்லா நேரங்களிலும், கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் கிடைக்கின்றன.

குறிப்பாக, வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் முதல் வேலையாக ராபிடோ ஓட்டுனர் வேலை உருவெடுத்து வருகிறது. இவ்வளவு ஏன், தாங்கள் இதற்குமுன் பார்த்து கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு ராபிடோ ஓட்டுனராக மாறியவர்களும் உள்ளனர். அதேநேரம் ஒரு சிலரோ, புத்திசாலித்தனமாக யோசித்து தங்களது கனவு வேலையை ஒருபுறம் பார்த்து கொண்டு, மறுப்பக்கம் ராபிடோ ஓட்டுனர் வேலையையும் பார்க்கின்றனர்.

அதாவது காலையில் தங்களது அலுவலக பணிகளையும், மாலையில் இருந்து நள்ளிரவு வரையில் ராபிடோவில் பணியாற்றுபவர்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றனர். அல்லது ஒரு சிலர் வார இறுதி நாட்களில் மட்டும் அலுவலக விடுமுறையை பயன்படுத்தி கொண்டு ராபிடோ ஓட்டுனர்களாக மாறுகின்றனர். அத்தகைய ராபிடோ ஓட்டுனரை பற்றிதான் இனி பார்க்க போகிறோம்.

பெங்களூரில் நிகில் சேத் என்ற இளைஞர் வழக்கம்போல் ராபிடோவில் பயணிக்க புக் செய்துள்ளார். பின்னர், நிகிலை பிக்-அப் செய்ய ரைடர் வந்துள்ளார். அதுவரையில் அவர் ஒரு மைக்ரோசாஃப்ட் பொறியியலாளர் என்பது நிகிலுக்கு தெரியாது. பயணத்தின்போது அவரிடம் பேச்சு கொடுக்க, தன்னை அழைத்து சென்று கொண்டிருப்பவர் மைக்ரோசாஃப்ட் பொறியியலாளர் என்பதை நிகில் அறிந்து கொள்கிறார்.

இதற்கான காரணத்தை நேரடியாக அவரிடமே கேட்டப்போது, புது புது மனிதர்களை சந்திக்க வேண்டும், அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பது தனது விருப்பம், இதனை வார இறுதி நாட்களில் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளதாக அந்த ஓட்டுனர் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் மனம் நெகிழ்ந்து போன நிகில் இதனை அப்படியே தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த நபரை பற்றிய விபரங்கள் எதையும் குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.

நிகில் சேத்தின் இந்த டுவிட்டர் பதிவிற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. மென்பொருள் பொறியியலாளர் பணி என்றாலே மிகவும் அமைதியான பணிச்சூழலில், தினந்தோறும் பார்த்த முகங்களையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு இருப்பது போன்றுதான் இருக்கும். இத்தகைய பணிச்சூழல் சிலருக்கு பிடித்திருந்தாலும், சிலருக்கு ஒருகட்டத்திற்கு மேல் வெறுப்பாகி விடுகிறது. அத்தகையவர்களில் ஒருவராகவே இந்த ராபிடோ ஓட்டுனர் இருக்க வேண்டும்.

இந்த ஓட்டுனருக்கு எதிர்பார்த்தப்படி புதிய நபர்களுடனான கலந்துரையாடலும் கிடைக்கிறது, அதேநேரம் சிறிது பணத்தையும் ஈட்ட முடிகிறது. அதாவது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இதேபோன்று முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில், உபேர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் பிராப்ஜோட் சிங் ஒருநாள் உபேர் கேப் ஓட்டுனராக மாறிய நிகழ்வு இணையத்தில் வைரலாகியது.

பிராப்ஜோட் சிங்கின் இந்த முடிவிற்கு காரணமும், கிட்டத்தட்ட மேற்கண்ட ராபிடோ ஓட்டுனரை போன்றதுதான். ஆனால் பிராப்ஜோட் உபேர் கேப்-களில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணோட்டம் எவ்வாறு உள்ளது என்பதையும், அவர்களது தேவை என்னவாக உள்ளது என்பதையும் அறிய நேரடியாக தானே கேப் ஓட்டுனராக களத்தில் இறங்கி இருந்தார்.

இவ்வாறு உபேர், ராபிடோ டாக்ஸி சேவைகளை சுற்றி சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைப்பெற்று கொண்டிருக்க, இத்தகைய ஆன்லைன் டாக்ஸி சேவைகளின் வளர்ச்சி ஆட்டோக்காரர்களுக்கும், முன்னர் காலத்தில் இருந்தே டாக்ஸி ஓட்டுபவர்களுக்கும் தலைவலியாக மாறியுள்ளது.

இந்த பிரச்சனை ஆட்டோ & டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் வரையில் சென்றதை அடுத்து, கர்நாடகாவில் யெஸ்வந்த்பூர் பகுதியில் ஆர்டிஓ 120 ராபிடோ இருசக்கர வாகனங்களை சில மாதங்களுக்கு முன்பு பறிமுதல் செய்திருந்தனர். இந்த இருசக்கர வாகனங்கள் அனைத்தும் வெள்ளை நிற நம்பர் ப்ளேட் உடன் பைக் டாக்ஸி சேவையில் உட்படுத்தப்பட்டு வந்ததாக கூறி போலீஸார் பறிமுதல் செய்தனர்.


Click it and Unblock the Notifications








