ஆட்டோ டிரைவர் யாரென்று தெரிந்ததும் மிரண்டு போன பயணி... டீ-சர்ட் காட்டி கொடுத்துடுச்சு!!
இணையம் எந்த அளவிற்கு நம்மை ஆட்கொண்டுள்ளது என்பதன் வெளிப்பாடாக, சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் (Microsoft) சில மணிநேரம் செயல்படாமல் போன போது கண்கூடாக பார்த்தோம். சாதாரண மக்களுகே இப்படியென்றால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்களது வேலை இனி இருக்குமா இருக்காதா என்கிற அளவிற்கு பயம் ஏற்பட்டிருக்கும். இதனாலோ என்னவோ... இங்கு ஒரு மைக்ரோசாஃப்ட் ஊழியர் ஒருவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை பார்த்து வருகிறார். யார் இந்த மைக்ரோசாஃப்ட் ஊழியர்? எதற்காக இந்த தொழிலை பார்த்து வருகிறார்? என்பதை இனி பார்க்கலாம்.
இந்த மைக்ரோசாஃப்ட் ஊழியர் மொத்தமாக தனது வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலை பார்க்கவில்லை. பகுதி நேரமாகவே கவனித்து வருகிறார். பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தாலும், விடுமுறை நாட்களில் வேறொரு பார்ட்-டைம் தொழிலையும் மேற்கொள்ளும் பழக்கம் சமீப காலமாக இளம் தலைமுறையினர் இடையே அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, டெல்லி, பெங்களூர் போன்ற மாநகரங்களில் விடுதிகளில் தங்கியிருந்து பணியாற்றுபவர்கள் இவ்வாறு தங்களது வருவாயை பெருக்கிக் கொள்கின்றனர். இருப்பினும், மைக்ரோசாஃப்ட் போன்ற உலகின் பெரும் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் ஆட்டோவில் பயணிக்க கூட மாட்டார்கள் எனும்போது, இந்த நபர் ஆட்டோ ஓட்டுவது பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
வெங்கடேஷ் குப்தா என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவை படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "கோரமங்களாவில் (பெங்களூர்) உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 35 வயதான மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் வார இறுதி நாட்களில் தனிமையை எதிர்த்து போராட நம்ம யாத்ரியை ஓட்டுகிறார்" என்பதாகும்.
இந்த பதிவுடன், அந்த நபரை பின்னால் இருந்து படம் பிடித்து பதிவிட்டுள்ளார். அதாவது, வெங்கடேஷ் குப்தா இந்த மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பொறியியலாளரின் ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த நபரது பனியனில் மைக்ரோசாஃப்ட் என எழுத்தப்பட்டு இருப்பதை பார்த்து, அதுகுறித்து வெங்கடேஷ் குப்தா கேட்டிருக்க வேண்டும். அப்போது அந்த நபர் அளித்த பதில்களையே எக்ஸ் தளத்தில் வெங்கடேஷ் பதிவிட்டுள்ளார்.
வெங்கடேஷ் குப்தாவின் பதிவின் மூலம் பார்க்கும்போது, அந்த மைக்ரோசாஃப்ட் ஊழியர் கூடுதல் வருவாய்க்காகவோ அல்லது வேலையை இழக்கும் பயத்திலோ ஆட்டோ ஓட்டும் தொழிலை பார்க்கவில்லை. வார இறுதி நாட்களில் அறையில் தனிமையில் இருப்பதற்கு பதிலாக இவ்வாறு பயணிகளுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கலாம் என்பதற்காகவே இந்த தொழிலை பார்த்து வருகிறார். அதேநேரம், கணிசமான வருவாயும் அவருக்கு கிடைக்கிறது. இதற்காக 'நம்ம யாத்ரி'-இல் இணைந்துள்ளார்.
நம்ம சென்னையில் ஓலா, உபேர் இருப்பதை போன்று பெங்களூரிலும் இந்த நிறுவனங்களின் கீழ் ஆட்டோ டிரைவர்கள் பணியாற்றுகின்றனர். அதேநேரம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் பிரத்யேகமாக நம்ம யாத்ரி மொபைலி செயலியும் பெங்களூரில் செயல்படுகிறது. நம்ம யாத்ரி செயலி மூலமாக ஆட்டோ டிரைவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், பயணிகளுக்கான கட்டணமும் குறைவாக இருக்கிறது. இவ்வாறு டிரைவர்கள் மற்றும் பயணிகள் என இருவருக்கும் நம்ம யாத்ரி பயனுள்ளதாக இருப்பதற்கு முக்கிய காரணம், இந்த சேவையில் இடை தரகர்கள் யாரும் கிடையாது. நேரடியாக பயணிகளும், ஆட்டோ டிரைவர்களும் தொடர்புக் கொள்கின்றனர். இதே சேவை மேற்கு வங்காள மாநிலத்தில் யாத்ரி ஷாதி என்கிற பெயரில் பயன்பாட்டில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பகுதி-நேர வேலைகள் கூடுதல் வருவாயையும், பொழுதுப்போக்கையும் தரவல்லவை என்றாலும், அதேநேரம் இவ்வாறு தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருப்பது மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தும். ஆனால், புத்திச்சாலித்தனமாக இந்த நபர் ஆட்டோ ஓட்டும் தொழிலை பார்த்து வருகிறார். ஏனெனில், இந்த தொழிலில் தேவைப்படும் எப்போது வேண்டுமானாலும் லீவ் எடுத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








