நள்ளிரவு ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க! அப்புறம் ஃபைன் தீட்டிருவாங்க!
இந்தியாவில் நள்ளிரவில் ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்யும் போது பலர் தேதி மாற்றி புக் செய்த சம்பவம் அதிகம் நடக்கிறது. பலருக்கு இந்த குழப்பம் இருக்கிறது. இது என்ன விஷயம்? ஏன் இந்த குழப்பம் வருகிறது? விரிவாகக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்கள் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே இயக்கப்படுகின்றன. இந்திய மக்கள் பயண நேரத்தைச் சேமிக்க இரவு நேரத்தில் பயணிக்கவே அதிகம் விரும்புகின்றனர். இதனால் இரவு நேர ரயில்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த இரவு நேர ரயிலில் புக்கிங் செய்வதில் சிலருக்கு மட்டும் பிரச்சனை ஏற்படுகிறது.

ஒரு ரயிலில் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு ஒரு ஊரைக் கடக்கிறது என்றால் அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட ரயிலில் டிக்கெட்களை புக்கிங் செய்ய நினைப்பவர்கள் பலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது. உதாரணமாகச் சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ரயில் மே 12ம் தேதி நள்ளிரவு 12 :05 மணிக்குத் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ஒரு ரயில் கிளம்புகிறது என வைத்துக்கொள்வோம். அந்த ரயில் மே 11ம் தேதி இரவே சென்னையிலிருந்து கிளம்பியிருக்கும்.
இந்த ரயிலில் திருச்சியிலிருந்து திருநெல்வேலிக்குப் பயணிக்க நினைப்பவர்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யும் போது மே 12ம் தேதி ரயிலில் புக்கிங் செய்ய வேண்டும். ஆனால் பலர் மாறாக ரயில் 11ம் தேதி தானே கிளம்புகிறது அதனால் 11ம் தேதியில் தான் புக்கிங் செய்ய வேண்டும் என நினைத்து மாற்றி புக் செய்து விடுகிறார்கள். இந்த குழப்பத்தால் பலரும் ரயிலில் பயணிக்கும் போது பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.

அதாவது ரயில் எந்த ஸ்டேஷனிலிருந்து கிளம்புகிறதோ அந்த மணி நேரம் தான் கணக்கு, மேலே குறிப்பிட்ட உதாரணத்தின் படி மே 12ம் தேதி தான் குறிப்பிட்ட ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து கிளம்புகிறது. இதனால் அந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் போது மே 12ம் தேதி ரயிலுக்கான டிக்கெட்டை தான் புக் செய்ய வேண்டும். பலர் குழப்பத்தில் 11ம் தேதி ரயிலில் புக் செய்துவிட்டு 12ம் தேதி ரயிலில் ஏறிக் குழப்பத்தை ஏற்படுத்திப் பயணிக்க முடியாமல் தவித்துவிடுவார்கள்.
சிலருக்கு ஒரு குழப்பம் வரும் ஒரு ரயில் நிலையத்திற்குக் குறிப்பிட்ட ரயில் இரவு 11.55 மணிக்கு வருகிறது. நள்ளிரவு 12.05க்கு கிளம்புகிறது என்றால் எந்த நாளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குழப்பம் வரும் இப்படியான சூழ்நிலைக்காகவே விளக்கமாக ஒரு ரயில் நிலையிலிருந்து ரயில் கிளம்பும் நேரம் தான் கணக்கு அதனால் ரயில் கிளம்பும் நாள் மறுநாளாக இருந்தால் நீங்கள் மறுநாள் தேதியில் தான் டிக்கெட்களை புக்கிங் செய்ய வேண்டும்.
இந்த பிரச்சனை தென் மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் ரயில்களில் திருச்சி சேலம், ஈரோடு, விருத்தாசலம், தஞ்சை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனையாக இருக்கிறது. இதை அவர்கள் இப்படி தான் சமாளிக்க வேண்டும். இந்த விளக்கத்தில் மேலும் சிலருக்குப் புதிதாக ஒரு குழப்பம் வரலாம்.
ஒரு வேளை நாம் 11.55 மணிக்கு கிளம்ப வேண்டிய ரயிலுக்குச் சரியாக புக் செய்துவிட்டோம் ஆனால் ரயில் தாமதமாக 12.15க்கு வந்தால் மறுநாள் ஆகிவிடுமே அந்த ரயிலில் ஏறலாமா என்ற சந்தேகம் வந்தால் உங்களுக்கான பதில் ஏறலாம் தான். டிக்கெட் புக் செய்யும் போது ரயிலில் செட்யூல் செய்யப்பட்ட நேரம் மட்டுமே கணக்கு தாமதம் ஆகும் நேரம் கணக்கு கிடையாது. இதனால் செட்யூல் நேரம் எதுவே அதன்படியே டிக்கெட்களை புக்கிங் செய்யுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் பலர் நள்ளிரவு நேர ரயில் புக்கிங் செய்யும் போது இப்படி மாற்றி டிக்கெட்டை புக் செய்து நள்ளிரவு நேரத்தில் ரயிலில் ஏறியபின் தேதி மாறியது தெரிந்த குடும்பத்துடன் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துள்ளனர். வேறு வழியில்லாமல் இவர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ததற்காக அபராதத்தைச் செலுத்திவிட்டு பயணம் செய்வார்கள். இனி ரயில் டிக்கெட் புக் செய்யும் போது கவனமாக இருங்கள்.


Click it and Unblock the Notifications