பெங்களூர் டு ஒடிஷா... கையில் பணமில்லை... சைக்கிள் வாங்க புலம் பெயர்ந்த தொழிலாளி செய்த காரியம்!
பெங்களூரில் இருந்து ஒடிஷாவில் உள்ள சொந்த ஊருக்கு செல்ல சைக்கிள் வாங்க பணமில்லாததால், புலம் பெயர்ந்த தொழிலாளி செய்த காரியம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட இந்த திடீர் ஊரடங்கால் தொழில்களும், வியாபார நிறுவனங்களும் தொடர்ந்து மூடியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை அதோ கதியாக மாறியது.

இந்த நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளிகளின் நிலை மிக மோசமாக இருந்து வருகிறது. கடந்த இரு மாதங்களாக வேலை இல்லாததால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தன்னார்வலர்களும், அரசாங்கம் சார்பில் வழங்கப்படும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டு காலத்தை கடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், நிலைமை சீரடைய இன்னும் சில மாதம் பிடிக்கும் நிலை இருப்பதால், வட மாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து வந்து தங்கியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன்சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

இருக்கும் வேலையை பார்த்து உணவுக்காவது வழி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதில், பலர் கஷ்டம் சொல்ல முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. பல நூறு கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளிலும், கால் நடையாகவும் கடந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கட்டாக் நகர் நெடுஞ்சாலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூன்று பேர் சைக்கிளில் வருவதை தன்னார்வலர்கள் சிலர் பார்த்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் பெங்களூரிலிருந்து ஒடிஷா மாநிலம் பார்தக் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பசுதேவ்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்கி உள்ளனர். மேலும், அவர்களிடம் விசாரித்ததில், ஒடிஷாவை சேர்ந்த சந்தன் ஜனா என்ற புலம் பெயர்ந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் நண்பர் தப்பன் ஜனாவுடன் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது.

பொது முடக்கம் தொடர்ந்து நீடித்து வந்ததால், வருவாய் இன்றி மிகுந்த சிரமப்பட்டுள்ளார். இதனையடுத்து, எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டியதுதான் என்று முடிவு செய்துள்ளனர். ஆனால், கையில் பணமில்லை.

இதற்காக,எந்த கணவனும் செய்ய தயங்கும் விஷயத்தை அந்த புலம் பெயர் தொழிலாளி செய்ததும் தெரிய வந்தது. சந்தன் தனது மனைவியின் தாலியை ரூ.15,000க்கு விற்று தலா ரூ.5,000 விலையில் இரண்டு சைக்கிள்களை வாங்கி உள்ளனர். அந்த சைக்கிள்களில் சந்தன் ஜனா, அவரது மனைவி மற்றும் நண்பர் தப்பன் ஜனா ஆகியோர் சொந்த ஊருக்கு திரும்பியது தெரிய வந்தது.

கிட்டத்தட்ட 1,600 கிமீ தூரம் அவர்கள் சைக்கிளிலேயே ஊர் திரும்பி உள்ளனர். எனினும், தன்னார்வலர்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் மட்டுமின்றி பிக்கப் டிரக் வாகனத்தை ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊருக்கு அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








