புல்வாமா தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பிற்காக களமிறங்கும் எம்பிவி வாகனம்...?
சிஆர்பிஎஃப் வீரர்களின் கான்வாய்க்காக, வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருந்து பாதுகாக்கும் 30 சீட்கள் கொண்ட சிறிய அளவிலான எம்பிவி வாகனத்தை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சிஆர்பிஎப் வீரர்கள் கான்வாய் சென்றுக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு, தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியது. கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி அன்று நடைபெற்ற இந்த பயங்கர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 45 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி, சுமார் 350 கிலோ வெடி பொருட்களைக் காரில் நிரப்பிக்கொண்டு, சிஆர்பிஎப் வீரர்களின் பேருந்துமீது நேருக்கு நேராக மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த தாக்குதலில் வெடித்து சிதறிய அந்தப் பேருந்தின் பாகங்கள் பல மீட்டர் உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தின் சத்தம் நான்கு கிலோ மீட்டரைத் தாண்டியும் கேட்டதாக ஜம்மு மக்கள் கூறுகின்றனர்.

சிஆர்பிஎப் வீரர்களின் 40 பேரின் உயிரை பலிவாங்கிய இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் என்ற பதற்றம் ஏற்பட்டது. மேலும், தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனத்தை பாகிஸ்தானுக்கு தெரிவித்தன.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்தியா பதில் தாக்குதல் நிகழ்த்தி பதிலடி கொடுத்தது. அதில், பல முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, போர் விமானங்களை புதிதாக இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பிற்காக எம்பிவி எனப்படும் வெடிகுண்டு பாதுகாப்பு வாகனங்களை கான்வாயின்போது பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எம்பிவி வேன் சிறிய வகையிலும் ஒரே நேரத்தில் 30 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து, காஷ்மீர் மாநிலத்தின் பள்ளதாக்குகளில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பாதுகாக்கும் வகையில் 65 பாம்ப் ஸ்குவாட் பட்டாளியன்களை பணியில் ஈடுபடத்த உள்ளனர். இவர்கள், வீரர்களின் கான்வாய் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக மற்றும் வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் நிறுவுகின்ற வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிஆர்பிஎப் அமைப்பின் பொது இயக்குநர் ஆர்ஆர் பாத்நகர் கூறியதாவது, "வீரர்களின் பாதுகாப்பான கான்வாய்-க்காக எம்பிவி வாகனங்களை பயன்படுத்த தயாராகி வருகிறோம். இந்த வாகனங்கள் நிலத்தில் புதைக்கப்பட்ட கன்னிவெடிகள், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதலில் இருந்து வீரர்களைப் பாதுகாக்கும். இந்த எம்பிவி வாகனத்தில் 30 பேர் மட்டுமே பயணிக்க முடியும்" என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, "தற்போது பயன்பாட்டில் இருக்கும் எம்பிவி வாகனங்கள் ஆறு பேர் செல்லக்கூடிய வகையில் நான்கு சக்கரங்களைக் கொண்டதாக இருக்கின்றது. இதுபோன்ற புல்லட் புரூஃப் வாகனங்கள் சிறிய அளவில் இருப்பதே மிகச்சிறந்தது. ஏனென்றால், பெரிய ரக வாகனங்களில் புல்லட் புரூஃபிற்கான கூரை அடுக்குகள் அதிகரிப்பதனால், அதன் வேகம் உள்ளிட்ட எஞ்ஜினின் செயல்திறன்கள் குறைந்துவிடும். இதனால், அவசர காலங்களில் வாகனங்கள் வேகமாகச் செல்ல முடியாத சூழல் ஏற்படும். ஆகையால், தற்போது 30 பேர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் எம்பிவி வாகனங்கள் தயார் செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இந்த வாகனத்தை நக்ஸல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் குழுக்களுக்கு மட்டுமே வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், எம்பிவி வாகனங்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருந்தும், சிறிய ரக கன்னி வெடிகளில் இருந்து மட்டுமே வீரர்களைப் பாதுகாக்கும் என்று ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாகனங்கள் புல்வாமா போன்ற பயங்கர வெடி விபத்தில் காப்பாற்றாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








