இனி இந்த 6 மாவட்டங்களுக்கு டீசல் கிடையாது... நிதின் கட்காரி உறுதி எடுத்த அதிரடி முடிவு!
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும், ஐந்து வருடங்களுக்கு டீசல் விற்பனை தடை செய்யப்பட இருப்பதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் அண்மைக் காலங்களாக எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை, எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக, அரசு தொடுத்திருக்கும் போர் என்று கூட கூறலாம்.

அந்த அளவிற்கு பல்வேறு முயற்சிகளும், நடவடிக்கைகளும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சர் நிதின் கட்காரி, ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆறு முக்கிய நகரங்களில் ஒரு துளி டீசல் கூட இனி விற்பனைச் செய்யப்படாது என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு, மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர், பந்தாரா, கோண்டியா, சந்தரபூர், கட்சிரொல்லி மற்றும் வர்தா ஆகிய ஆறு மாவட்டங்களில், இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு டீசல் விற்பனை தடை செய்யப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அண்மையில், சிஐஐ நேஷனல் கவுன்சில் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பஸ் மற்றும் கனரக ஊர்திகளுக்கு பயன்படுத்தும் வகையிலான இயற்கை-சிஎன்ஜி எரிபொருளை தயாரிக்க, அந்தந்த மாவட்டங்களில் உற்பத்தி நிறுவனங்களை தயார் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்காக, ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நிதின் கட்காரி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மட்டுமின்றி சிறு குறு வணிக நிறுவன துறையின் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகின்றார்.

ஆகையால், இந்த முயற்சியானது, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி, எரிபொருளுக்காக செய்யப்படும் செலவீனத்தை தவிர்க்கும் வகையிலும் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக ரூ. 17 லட்சம் செலவி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற, செலவீணங்களை தவிர்க்கவே, இதுபோன்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, நாட்டில் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம், காற்று மாசடைதல் மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் நோக்கிலும் இதனை அரசு செய்து வருகின்றது.

இதற்கு முன்பாக கூட, ஓர் அதிரடி நடவடிக்கையாக சாலை போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டினைக் கட்டுபடுத்தும் விதமாக வருகின்ற 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரு சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட இருப்பதாக நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஐசி திறன்கொண்ட அனைத்து இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து, 2023ம் ஆண்டு முதல் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 2025ம் ஆண்டு முதல் பெட்ரோல் இரு சக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே, நாட்டில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, எரிபொருளுக்காக அரசு செய்துவரும் செலவீணமும் தடுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும், ஆறு மாவட்டங்களுக்கான டீசல் தடையானது, சிறு குறு வணிக நிறுவனங்களின் மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆகையால், அவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட உள்ளது. மேலும், இதுபோன்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








