வாகனங்களில் கோளாறா? இதோ புகாராளிப்பதற்கான அரசின் புதிய தளம்! தயங்காமல் புகாரளிக்கலாம்!
வாகனம்குறித்து புகாரளிக்க தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் புதிய இணைய பக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல தகவலைக் கீழே காணலாம்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் (MoRTH) பாரிவாஹன் தளத்தில் ஓர் புதிய பக்கத்தை (போர்ட்டலை) உருவாக்கியிருக்கின்றது. வாகன பயனர்கள் தங்களின் வாகனங்களில் உள்ள குறைபாடுகள்குறித்த புகாரை அளிக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

குறைபாடுகள் குறித்த புகார்களை பதிவு செய்ய வாகன உரிமையாளர்களுக்கு உதவும் முயற்சியாகவும் இத்தளம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகையால், கோளாறான வாகனங்கள்குறித்த புகார்கள் அளிப்பது இனி எளிதானதாக மாறியுள்ளது.

கோளாறான வாகனங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் திருப்பி அழைப்பது என்பது வாடிக்கையான ஒன்று. ஆனால், அரசின் இந்த புதிய இணைய பக்கம் தன்னார்வ வாகன திரும்ப அழைத்தலை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் புகாரை உடனடியாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் கவனம் கொள்ளும் வகையில் புதிய இணைய பக்கம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்திய வாகன பயனர்களுக்கு நம்பிக்கை விதைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

வாகனங்களில் ஏற்படும் கோளாறுகள் மட்டுமின்றி மென்பொருளில் ஏற்படும் சிக்கல், பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் போன்றவற்றைகுறித்தும் இப்பக்கத்தில் புகாராக முறையிடலாம். நீங்கள், கோளாறான வாகனம்குறித்த புகாரை அளிக்க வேண்டுமானால், உங்களது வாகனம் வாங்கி ஏழு ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

அதற்கு மேலான காலம் கொண்ட வாகன உரிமையாளர்களால் இத்தளத்தில் புகாரளிக்க முடியாது. அளிக்கப்படும் ஒவ்வொரு புகார்களுக்கும் தனிக் கவனம் செலுத்தப்படும் என அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புகார்கள் பின் தொடரப்பட்டு வாகனத்தை திரும்ப அழைப்பதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.

தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் மோட்டார் வாகன சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதில், மிக முக்கியமான மாற்றமாக, வாகன உற்பத்தியாளர்கள் 'கட்டாய வாகன திரும்ப அழைத்தல்' (mandatory vehicle recall)-ஐ மேற்கொள்ள வேண்டும் என்ற மாற்றத்தைக் கொண்டு வந்தது.

இதனடிப்படையிலேயே புதிய இணைய பக்கம் நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (என்.எச்.டி.எஸ்.ஏ) போன்று ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாக செயல்பட இருக்கின்றது.
குறிப்பு: வாகனங்களின் படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








