இந்தியச் சாலைகளில் பாச கயிற்றுடன் எமன் வலம் வரும் நேரம் எது தெரியுமா? அரசு வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த விபத்துகள் குறித்த விரிவான ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்த ரிப்போர்ட் குறித்து ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது விபத்து அதிகம் ஏற்பட்ட நேரம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த விபத்துக்கள் குறித்த விரிவான ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில் 2021ம் ஆண்டில் நடந்த விபத்துக்கள், அந்த ஆண்டில் ஏற்பட்ட விபத்துக்களில் பலியானவர்கள், விபத்து நடந்த காரணங்கள், எந்த தவறால் அதிகம் விபத்து நடந்துள்ளது. இப்படியான தகவல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது எந்த நேரத்தில் அதிகமான விபத்துக்கள் நடக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மாலை 3 மணியிலிருந்து இரவு 9 மணி வரை தான் இந்தியாலேயே அதிகமான விபத்துகள் நடந்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள விபத்துக்கள் நிகழ்ந்த நேரப்படி பிரித்தால் மொத்தம் நிகழ்ந்த விபத்துகளான 4.12 லட்சம் விபத்துக்களில்1.58 லட்சம் விபத்துக்கள் மாலை 3 மணி முதல் இரவு 9 மணிக்குள் நிகழ்ந்துள்ளது.
அதில் குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள் தான் மிக அதிகமாக அதாவது மொத்த விபத்துகளில் 20.7 சதவீதமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் 18 சதவீதமான விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இது தான் இரண்டாவது அதிகபட்சமாகும். இந்த இரண்டும் சேர்ந்து சுமார் 40 சதவீதமான விபத்துகள் மாலை 3 மணி முதல் 9 மணி வரையில் நிகழ்ந்துள்ளது.
இதுவே நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்தில் தான் குறைவான விபத்துக்கள் நடந்துள்ளது. மொத்தம் நிகழ்ந்த விபத்துக்களில் இந்த நேரத்தில் மொத்தம் 10 சதவீதத்திற்கும் குறைவான விபத்துக்கள் தான் நிகழ்ந்துள்ளது.
இந்த 2021ம் ஆண்டிற்கான விபத்தின் அறிக்கைகளை அதற்கு முந்தைய ஆண்டுகளின் அறிக்கைகளுடன் ஒப்பிடும் போது 2017ம் ஆண்டிற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாலை 3 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் நிகழ்ந்த விபத்துக்களின் 35 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. 2020ம் ஆண்டு மட்டும் அதை விடக் குறைவாக இருக்கிறது. அதற்கு அப்பொழுது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள லாக்டவுன் முக்கியமான காரணமாக இருக்கிறது. 2017-2021ம் ஆண்டு வரை இந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 85 ஆயிரம் சாலை விபத்துகளுக்கு மேல் நடந்துள்ளது.
இந்த அறிக்கையின் படி கடந்த 2021ம் ஆண்டு மொத்தம் 4,12,432 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளது. அதில் 1,53,972 பேர் மரணமடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். மாநில வாரியாக பார்க்கும் போது தமிழ்நாட்டில்தான் அதிகமான விபத்துகள் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 55,682 விபத்துக்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. இது ஒட்டு மொத்த விபத்தில் 13.5 சதவீதமாகும். அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது. இங்கு 48,877 விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இது ஒட்டு மொத்த விபத்தில் 11.8 சதவீதமாகும்.
உ.பி மாநிலம் தான் விபத்தில் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த மாநிலமாக இருக்கிறது. மொத்தம் 21,227 பேர் விபத்தில் மரணமடைந்துள்ளனர். 2021ம் ஆண்டு நடந்த விபத்துக்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட 8.1 சதவீதம் குறைந்துள்ளது. அதே போலக் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 14.8 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








