கோவையை புரட்டி போட்ட சம்பவம்... 17 வயது சிறுவனிடம் விலையுயர்ந்த கார் - வட இந்திய தொழிலாளிகள் இல்லையென்றால்...!
நாட்டின் எதிர்காலத்தை எண்ணி பயப்படும் அளவிற்கு சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை ஓட்டியதால் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில், புனேவில் நடந்த போர்ஷே கார் விபத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். 17 வயது சிறுவன் மதுபோதையில் அதிவேகமாக ஓட்டி சென்ற விலையுயர்ந்த போர்ஷே கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், 17 வயது சிறுவன் மது போதையில் இருந்ததே அதிர்ச்சி எனும்போது, அவனை போர்ஷே போன்ற அதிவேகமாக இயங்கக்கூடிய காரை ஓட்ட அனுமதித்தது மற்றும் அவன் ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்தது எல்லாம் இன்னும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பிறகு, வழக்கில் இருந்து அவனை காப்பாற்ற அவனது பெற்றோர் நடத்திய நாடகங்களை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். விபத்தை ஏற்படுத்திய போர்ஷே கார் பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமின்றி, அந்த சிறுவனும் தற்போது சிறுவர் சீர்த்திருத்த காப்பகத்தில் உள்ளான். இவ்வாறான சம்பவங்கள் மும்பை, டெல்லி போன்ற வட இந்தியாவில்தான் அதிகம் நடைபெறும் என நாம் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் சமீபத்தில் சில தினங்களுக்கு முன் நம் சென்னையில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது.

புனே சம்பவத்திலாவது பரவாயில்லை 17 வயது சிறுவன், சென்னையில் நடந்த சம்பவத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு வயது வெறும் 14 மட்டுமே. 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் இருவர் சென்னையின் பரபரப்பான ஜாம் பஜார் பகுதியில் டொயோட்டா இன்னோவா காரில் அதிவேகமாக சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில், காரின் கண்ட்ரோலை அந்த சிறுவர்கள் இழக்க, அந்த இன்னோவா கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மோதலை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சிறுவர்களை 1 கிமீ தொலைவிற்கு விரட்டி சென்று போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், கோயம்புத்தூரில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை பீளமேடு பகுதியில் 17 வயதாகும் பிளஸ் 2 மாணவன் ஓட்டி சென்ற கார் மோதி பரிதாபமாக தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை, சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜின் 17 வயது மகன் கடந்த ஜூலை 18ஆம் தேதி நள்ளிரவில் அவினாஷி சாலையில் காரில் சென்றுள்ளான். காரை அவன் அதிவேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு வட இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
17 வயது சிறுவன் ஓட்டிய கார் அங்கு மேம்பால பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த அக்ஷய் வேரா (23) என்பவர் மீது வேகமாக மோதியது. இதில், அந்த புலம்பெயர் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொழிலாளி மீது மோதிய கார் பின்னர் சாலையின் மத்தியில் இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது. தடுப்பு சுவரின் மீது அதிவேகமாக மோதியதில் கார் தீப்பிடித்தது.
அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் உடனே காரின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த சிறுவனை காப்பாற்றி உள்ளனர். இந்த சம்பவம் ஜூலை 18ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூரின் பீளமேடு பகுதியில் இருந்து காந்திபுரத்திற்கு இந்த 17 வயது சிறுவன் காரில் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.
இந்திய மோட்டார் வாகன சட்டம் 1988இன் படி, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டக் கூடாது. ஆனால், நம் தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு மட்டும் குறைந்தப்பட்ச வயது வரம்பாக 16 உள்ளது. 3-சக்கர/ 4-சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு 18 தான் குறைந்தப்பட்ச வயது வரம்பாகும். ஆதலால், கோயம்புத்தூரில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் சிறுவன் சட்டத்தை மீறியிருப்பதுடன், ஒரு உயிர் பலியையும் ஏற்படுத்தி உள்ளான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறுவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிப்பது எப்போதுமே ஆபத்தனாது ஆகும். ஒருவேளை அவர்கள் வாகனங்களை சிறப்பாக ஓட்டினாலும், இத்தகைய செயல்கள் சட்டத்திற்கு புறம்பானது ஆகும். ஏனெனில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 3-சக்கர/ 4-சக்கர வாகனங்களை ஓட்ட கூடாது என்கிற சட்ட விதிமுறைகள் பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகே இயற்றப்பட்டுள்ளன. ஆதலால், அதனை எளிதாக புறந்தள்ளிவிட முடியாது.


Click it and Unblock the Notifications








