மூதாட்டி மீது ஸ்கூட்டர் மோதல்... திரும்பி கூட பார்க்காமல் சென்ற சிறார்கள்... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!
மூதாட்டி மீது சிறார்கள் இரு சக்கர வாகனத்தை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு இரு சக்கர வாகனங்கள்தான் முக்கியமான காரணமாக உள்ளன. இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், விபத்துகளுக்கு காரணமான இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது சிறார்கள்தான். இந்த சூழலில், ஐதராபாத் நகரில் நடைபெற்றுள்ள ஒரு விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று பேர் பயணம் செய்து வந்த ஸ்கூட்டர் ஒன்று விபத்தில் சிக்கியதுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். இந்த மூன்று நபர்களும் ஸ்கூட்டரில் வந்தபோது, மூதாட்டி ஒருவர் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இந்த 3 நபர்களும், மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்து அதிவேகமாக வந்தனர்.

அப்போது அந்த மூதாட்டியை அவர்கள் பார்த்தனர். ஆனால் அவர்களால் ஸ்கூட்டரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக பின் பகுதியில் இருந்து அவர்கள் மூதாட்டி மீது மோதினர். இதுவே தவறு என்னும் நிலையில், அவர்கள் ஸ்கூட்டரை நிறுத்தவும் இல்லை. மூதாட்டி எப்படி இருக்கிறார்? என்பதை அவர்கள் திரும்பி கூட பார்க்கவில்லை.

மாறாக தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தனர். எனினும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த மூதாட்டிக்கு உதவி செய்தனர். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த மூதாட்டி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார் என்பதுதான். எனினும் ஸ்கூட்டரில் வந்த மூன்று பேரும் நிற்காமல் சென்றது வருத்தமான விஷயம்தான்.

தற்போதைய நிலையில் காவல் துறையினர் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்கள் யாரிடமும் ஓட்டுனர் உரிமம் இல்லை. எனினும் அந்த மூன்றில் இரண்டு பேரை காவல் துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் சிறை கம்பிகளுக்கு பின்னால் உள்ள புகைப்படத்தையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இதுதவிர அந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இந்த மூன்று பேரில் ஒருவரின் பெற்றோர் ஆவார். இந்தியாவை பொறுத்தவரை, உரிய வயதை எட்டாமல், அதே சமயம் ஓட்டுனர் உரிமம் பெறாத ஒருவர் வாகனங்களை இயக்கும்பட்சத்தில், அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு விதிமுறைகள் உள்ளன.

கடந்த காலங்களில் இதே ஐதராபாத் நகரில் சிறார்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. இன்னும் சொல்வதென்றால், உரிய வயதை எட்டாத சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களை காவல் துறையினர் சிறைக்கும் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அந்த நடவடிக்கைகள் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஓட்டுனர் உரிமம் இல்லாத சிறார்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் காவல் துறையினருக்கு உள்ளது. எனவே பெற்றோர்களும், சிறார்களும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் காவல் துறையினரின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.


Click it and Unblock the Notifications








