பயிற்சிக்கு செல்ல லிஃப்ட் கொடுத்த லாரி டிரைவர்களுக்கு, ஒலிம்பிக் மங்கை கொடுத்த சர்ப்ரைஸ்!! என்னென்னு தெரியுமா?
2020 ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு, சில மணல் லாரி ஓட்டுனர்களை அழைத்து உபசரித்து சிறப்பித்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23ஆம் தேதியில் இருந்து நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று ஈட்டி எறிதல் பிரிவில் நீராஜ் சோப்ரா தங்க பதக்கத்தை வென்றுள்ளார். 2020 ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள முதல் தங்க பதக்கம் இதுவாகும்.

இதற்கு முன்னர் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தவர் மீராபாய் சானு. பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இவர், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் பெற்றோர் உடன் வசித்து வருகிறார்.

இவரது கிராமம் வசதியில் சற்று பின்தங்கியது என்பதால், மீராபாய் சானுவின் பெற்றோரிடம் சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி போதிய பண வசதி இல்லாததால் 25கிமீ தொலைவில் உள்ள இம்பாலில் உள்ள பயிற்சி மையத்திற்கு அவ்வழியாக செல்லும் லாரிகளில் லிஃப்ட் கேட்டு சென்று வந்துள்ளார்.

இத்தகைய கடின உழைப்பின் பரிசாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதை அடுத்து, முதல் வேளையாக தனக்கு லிஃப்ட் கொடுத்து உதவிய சுமார் 150 லாரி ஓட்டுநர்களை நேரில் அழைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார், மீராபாய் சோனு.

அத்தோடு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, மதிய உணவும் அளித்து உபசரித்துள்ளார். இது தொடர்பான படங்களை மீராபாய் சோனுவின் ரசிகர்கள் பெருமிதத்துடன் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நன்றியுணர்வு என்பது உண்மையில் மிக அழகான உணர்ச்சிகளில் ஒன்றாகும். கடினமான காலங்களில் உதவியாக இருந்த மக்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவிக்க இது நினைவூட்டுகிறது. அத்தகைய நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த ஒலிம்பிக் பதக்க மங்கை நடந்து கொண்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் 49 கிலோ பெண்களின் பளுதூக்குதல் போட்டியில் 202 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றதால் இந்தியாவே மகிழ்ச்சியில் உள்ளது. அதிலும் குறிப்பாக மீராபாய் சானுவின் கிராமம் அதனை காட்டிலும் சந்தோஷத்தின் உச்சியில் திளைத்துள்ளது.

அப்படிப்பட்ட இந்த நேரத்தில் 150 லாரி டிரைவர்களை அழைத்து விருந்தளித்து நன்றி தெரிவித்திருப்பது கிராம மக்களுக்கு மீராபாய் சானு மீதான மரியாதையை மேலும் கூட்டியுள்ளது. இதுகுறித்து இம்பாலில் இருந்து வெளிவரும் செய்திகளில், ஒரு சட்டை, மணிப்பூர் தாவணி மற்றும் முழு மதிய உணவை லாரி ஓட்டுனர்களுக்கு அளித்து நன்றி தெரிவிக்கும்போது மீராபாய் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது பயணத்திற்கு பயிற்சி அளித்த லாரி ஓட்டுனர்கள் இல்லாவிட்டால் பளுதூக்குபவர் ஆக வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறி இருக்காது என்று அவர் மேலும் கூறினார். எப்படியோ இந்த நிகழ்வை இந்த 150 லாரி ஓட்டுனர்களும் மறக்க மாட்டார்கள்.

இதுகுறித்து மீராபாய் சானு கூறுகையில், வீட்டில் இருந்து பயிற்சி மையத்திற்கு எனக்கு வழக்கமாக லிஃப்ட் வழங்கிய லாரி டிரைவர்களை பார்க்கவும், அவர்களின் ஆசிர்வாதத்தை பெறவும் நான் விரும்பினேன். என் கடினமான காலங்களில் அவர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள்.

அத்தகையவர்களை தேடி வருகிறேன். அவர்களுக்கு இப்போது தேவைப்படும் உதவிகளை செய்ய நான் முயற்சிப்பேன் என கூறினார். போக்குவரத்து செலவை மிச்சப்படுத்தியதால் கிடைத்த பணத்தை பயிற்சியின்போது தேவைப்பட்ட பொருட்களை வாங்க பயன்படுத்தி கொண்டதாகவும் மீராபாய் தெரிவித்துள்ளார்.

மீராபாய் சானுவின் இந்த நன்றியுணர்வுமிக்க செயலுக்கு நெட்டிசன்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதில் ஒருவர், மீராபாய் உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்தவர்கள் உட்பட யாரையும் மறக்காமல் இருக்கிறீர்கள்.
உங்களிடம் இருந்து ஒரு பெரிய இதயத்தை தொடும் சைகையை காண்கிறேன். கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்பதை கூறி கொள்கிறேன். மேலும் நீங்கள் விளையாட்டில் மட்டுமல்ல, மனிதநேயத்திலும் பலருக்கு உத்வேகமாக இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications








