நோயாளிக்கு பதிலாக கல்லூரி மாணவிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்..!! (வீடியோ இனைப்பு)
நோயாளிக்கு பதிலாக கல்லூரி மாணவிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்..!! (வீடியோ இனைப்பு)
வாகன உலகில் நடக்கும் உடனுக்குடன் நிகழ்வுகளை மட்டுமல்ல, அந்த துறையில் நடக்கும் முறைகேடுகளை தருவதிலும் டிரைவ்ஸ்பார்க் தனித்து நிற்கிறது.

அந்த வகையில் நீங்கள் கீழே பார்க்கும் செய்தியில், அவசர கால ஊர்தி ஒன்று தவறாக பயன்படுத்தப்பட்ட சம்பவத்தை ஆதாரங்களுடன் படிக்க உள்ளீர்கள்.

அவசர ஊர்திகள், புரியும்படி சொல்லவேண்டும் என்றால் ஆம்புலன்ஸ் வாகனங்கள், உடல்நிலையில் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் வாகனங்களின் இரைச்சலுக்கு மத்தியில், சமீப காலங்களில் ஆம்புலன்ஸின் சைரன் ஒலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றன.

உடல்நிலை குன்றியவர்களுக்கு மட்டும் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தற்போது மற்ற தேவைகளுக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் செய்திகளை தினமும் கடந்து வருகிறோம்

இதனால் சாலையில் நாம் கடக்கும் ஒவ்வொரு அவசர ஊர்திகள் பற்றிய நிலை, நமக்கு சந்தேகத்தை எழுப்புவது சமீபகாலங்களில் தவரிக்க முடியாத ஒன்று.

கர்நாடகாவின் பெங்களூரு நகரத்தில் சாலையில் இடையூறு ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் ஒன்று முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வந்தது அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது.

பெங்களூரின் மல்லேஷ்வரம் பகுதியில் சென்றுகொண்டு இருந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஒன்று, முறைகேடாக இயக்கப்பட்டு வருவதாக அப்பகுதி போலீசாருக்கு புகார் வந்தது.

இதை அடுத்து, அந்த ஆம்புலன்ஸை விரட்டி பிடித்த காவல்துறையினர், ஓட்டுநரையும், அதில் பயணித்த மூன்று இளம் பெண்களையும் சிறைப்பிடித்தனர்.

அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூன்று இளம் பெண்களும் கல்லூரி தேர்விற்காக சென்று கொண்டு இருந்ததாகவும், நேரம் கடந்து விட்ட காரணத்தினால் ஓட்டுநரின் யோசனை பேரில் தேர்வு மையத்திற்கு ஆம்புலன்ஸில் பயணித்ததும் மாணவிகள் கூறினர்.

தேர்வு மையத்திற்கு அவசரமாக செல்லவேண்டி இருந்தால், எதற்காக ஆம்புலன்ஸில் சைரன் ஒலியை எழுப்ப வேண்டும் என்று பெங்களூரு போலீசார் ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பினர்.

நர்ஸிங் கல்லூரி மாணவிகளான அந்த மூன்று இளம் பெண்களின் நடவடிக்கைக்கும், ஓட்டுநர் அவசர ஊர்தியை தவறாக பயன்படுத்தியதற்கும் போலீசார் கடும் எச்சரிக்கை செய்தனர்.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவிகள் மீதும் வழக்கு பதியப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் நடந்த சமயத்தில் பொதுமக்கள் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தற்போது வைரலாக பரவி வருகிறது.

சேவையை கூட இன்று சுயநல தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளும் மனிதர்கள் அதிகளவில் பெருகிவிட்ட நிலையில்,
அவசர ஊர்தியின் மீது கூட இன்று பொதுமக்களுக்கு சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாத நிதர்சனங்களில் ஒன்று.


Click it and Unblock the Notifications








