1,600 அடி உயரத்தில் இருந்து விழுந்த மிட்சுபிஷி கார் - தேடி சென்ற கேரள போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
மிட்சுபிஷி பஜேரோ (Mitsubishi Pajero) கார் ஒன்று சுமார் 1,600 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்த போதிலும் காருக்குள் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் ஓர் மலைப்பிரதேச பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து இணையத்தில் வெளியாகியுள்ள படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மலைப்பிரதேச பகுதிகள் எந்த அளவிற்கு பார்ப்போரை கவரக்கூடியதோ அந்த அளவிற்கு ஆபத்துகளையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கக்கூடியது. இதனாலேயே மலைப்பகுதிகளில் பயணம் செய்யும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஏனென்றால், இத்தகைய பகுதிகளில் ஆபத்தில் சிக்க நேர்ந்தால், உதவிகளும் விரைவாக கிடைத்துவிடாது.

மலைப்பிரதேச சாலைகளில் மறைந்திருக்கும் ஆபத்துகளுள் ஒன்று வளைவு, வளைவான சாலைகள் ஆகும். இத்தகைய வளைவுகளில் திரும்பும்போது ஆபத்தில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள் பலரை தினந்தோறும் செய்திகளில் பார்த்து கொண்டிருக்கின்றோம். தற்போதைய மாடர்ன் கார்களில் டிராக்ஷன் கண்ட்ரோல், அடாஸ் போன்ற அதிநவீன தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டாலும், இதுபோன்ற விபத்துகளை குறைக்க முடிவதில்லை.
அந்த வரிசையில், கேரளாவின் தலைநகர் திருவனந்தப்புரத்திற்கு அருகே மலைப்பிரதேச பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மிட்சுபிஷி பஜேரோ கார் ஒன்று சுமார் 1,640 அடி (500 மீட்டர்கள்) உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. ஆனால் இதில் ஆச்சிரியமளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், காருக்குள் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர்.

எவ்வாறு, எதனால் கார் அவ்வளவு அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது? விபத்திற்கான காரணம் என்ன என்பது உறுதியாக தெரியவில்லை. பிரேக் சரியாக செயல்படாத காரணத்தினால் அல்லது வளைவில் திரும்பும்போது ஏற்பட்ட சறுக்கலினால் இந்த விபத்து நடந்திருக்கும் என போலீஸார் யூகித்துள்ளனர். போலீஸாரின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
1,640 அடி உயரத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து, கரப்பான் பூச்சி போல் தலைக்கீழாக கவிழ்ந்து கிடக்கும் பஜேரோ காரின் படங்கள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. இவ்வளவு அடி உயரத்தில் இருந்து கீழே விழும் காரினுள் இருப்பவர்கள் சீட்பெல்ட் அணிந்து இருந்தாலே உயிர் பிழைப்பது கடினம். சீட்பெல்ட் அணியாதவர்களின் நிலைமை இன்னும் மோசமானதாக மாறலாம்.

ஆனால் இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் அனைவரும் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதற்கு மிட்சுபிஷி பஜேரோ காரின் வலிமையான உடல் கட்டமைப்பை முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். சில சமயங்களில் காரின் உடல் வலிமையானதாக இருந்தாலும், விபத்தில் பயணிகள் உயிரிழப்பது உண்டு. ஆதலால் இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் பஜேரோ காரின் உடல் வலிமையானதாக இருந்தது மட்டுமின்றி, ஓட்டுனரும் விபத்தின்போது சாமர்த்தியமாக செயல்பட்டிருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறு அப்பளம் போல் நொறுங்கிய காரில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிருடன் மீண்டு வந்துள்ளனர் எனும்போது உண்மையில் நம்பவே முடியவில்லை. இவ்வாறான நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நிகழக்கூடியவை. சில அடி உயரத்தில் இருந்து விழுந்த காரில் பயணித்தவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே, மலைப்பகுதிகளில் பயணம் செய்யும்போது வழக்கத்தை விடவும் கூடுதல் கவனம் தேவை.


Click it and Unblock the Notifications









