ஒரே ஒப்பந்தத்தில் 2,000 பேருக்கு வேலை... செங்கல்பட்டை ஐடி பூங்காவாக மாற்றும் ஜப்பான் நிறுவனம்!!
நமது தமிழ்நாடு தொழில்துறையில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, வாகன உற்பத்தியில் ஹூண்டாய், மஹிந்திரா, ஃபோர்டு, அசோக் லேலண்ட், ராயல் என்ஃபீல்டு போன்ற பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உற்பத்தி பணிகளுக்கு இடமளித்து அந்த நிறுவனங்களின் வெற்றியில் தமிழ்நாடு பங்கு வகிக்கிறது. அந்த வகையில், ரெனால்ட்- நிஸான் கூட்டணியும் தமிழ்நாட்டு அரசு உடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவில் இருந்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் விதமாக, ரெனால்ட்- நிஸான் கூட்டணி நிறுவனங்களின் புதிய சர்வதேச மையம் நம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு நாட்டு கார் நிறுவனமான ரெனால்ட்டும், ஜப்பானிய கார் நிறுவனமான நிஸானும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன. இதன் விளைவாக, கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் இருந்து பல்வேறு விஷயங்களில் இந்த இரு நிறுவனங்களும் பலன் அடைகின்றன.

இந்தியாவில் இந்த கூட்டணி நிறுவனத்தின் தலைமையகம் நம் தமிழ்நாடு ஆகும். ஏனெனில், இந்த நிறுவனங்களின் கார்கள் சென்னைக்கு அருகே ஓரகடத்தில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு அதிகப்பட்சமாக 4 லட்சத்து 80,000 கார்களை உற்பத்தி செய்ய முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ரெனால்ட் மற்றும் நிஸான் கார்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் செல்கின்றன.
அதுமட்டுமின்றி, சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ரெனால்ட்- நிஸான் கார்கள் வெளிநாடுகளுக்கும் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு, தமிழ்நாட்டை பெரிதும் சார்ந்திருக்கும் ரெனால்ட்- நிஸான் நிறுவனத்தின் புதிய சர்வதேச மையம் ஒன்று நம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ரெனால்ட் நிஸான் நிறுவனத்திற்கு செங்கல்பட்டில் மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் சர்வதேச தொழிற்நுட்ப & வணிக மையம் 2007ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இங்கு, கண்டுப்பிடிக்கப்படும் தொழிற்நுட்பங்கள் மற்றும் தீர்மானிக்கப்படும் வணிக யுக்திகள் உலகளவில் ரெனால்ட்- நிஸான் கூட்டணி நிறுவனங்களில் செயல்படுத்தப் படுகின்றன. இவ்வாறு, ரெனால்ட்- நிஸான் நிறுவனங்களில் உலகளாவிய வணிகத்தை தீர்மானிக்கக்கூடிய பல முடிவுவுகள் செங்கல்பட்டில் செயல்படும் நிறுவனத்தால் எடுக்கப்படுகின்றன.
இந்த சர்வதேச நிறுவனத்தின் கீழ் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு, மஹிந்திரா சிட்டியில் இந்த நிறுவனம் செயல்படும் பகுதி புதிய பணியிடம் மூலம் பெரியதாக்கப்பட்டுள்ளது. சுமார் 1.38 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய பணியிடம் மூலமாக கூடுதலாக 2 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த பணியிடத்தை திறந்து வைத்தார். அப்போது, நிஸான் இன்ஜீனியரிங் & காஸ்டிங், ரெனால்ட் நிஸான் தொழிற்நுட்ப பிரிவின் முதன்மை துணை தலைவர் அகிரா ஹன்சாவா மற்றும் ரெனால்ட் நிஸான் தொழிற்நுட்ப பிரிவின் க்ளோபல் சர்வீஸ் டெலிவிரி & க்ளோபல் மையத்தின் துணை தலைவர் எவா ஜேம்ஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
2024 தமிழ்நாடு தொழில்முனைவோர் மாநாடு சென்னை அடையாறில் உள்ள லீலா அரண்மனையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம் 19 தொழில்துறை சார்ந்த திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் துவங்கி வைத்தார். அந்த 19 திட்டங்களில், ரெனால்ட்- நிஸான் தொழிற்நுட்ப & வணிக மையத்தின் பணியிட விரிவாக்கமும் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பணியிடத்தை விரிவுப்படுத்தி இருப்பதில் இருந்து சர்வதேச அளவில் ரெனால்ட்- நிஸான் கூட்டணி நிறுவனம் வளர்வதை அறிய முடிகிறது. புதிய தொழிலகம் மூலமாக ரெனால்ட்- நிஸான் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் நன்மை உள்ளது. ஏனெனில், கூடுதலாக 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது அல்லவா.


Click it and Unblock the Notifications









