அதிகாரிகளை நெற்றிக்கண்ணில் சுட்டெரித்த முதல்வர் ஸ்டாலின்!! ரோடு டிராஃபிக் அதிகமாக இருப்பதற்கு இதுதான் காரணம்..
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் சாலை, மேம்பால பணிகளை தேவையற்ற தாமதங்கள் இன்றி விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டு முதல்வர் மேலும் என்ன பேசினார் என்பதை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, சாலை மற்றும் பாலங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 3) காலை நடைபெற்றது. தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத்தில் நடைபெற்றுவரும் சாலை & மேம்பால பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரிவுகள் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் எந்த அளவிற்கு முடிவடைந்து உள்ளது என்பதையும், நிலுவைவில் எவ்வளவு பணிகள் இன்னும் உள்ளன என்பதையும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்பட 5 அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்பட சாலை போக்குவரத்து துறையை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "சாலை, மேம்பால பணிகளால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைப் பணிகளில் தேவையற்ற தாமதங்களை தவிர்த்து உரிய காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள சாலை, மேம்பால பணிகளை பருவமழைக்கு முன் நிறைவேற்ற வேண்டும். சென்னை சாலைகள் இயற்கை பேரிடரை தாங்கும் அளவிற்கு சரி செய்யப்பட்டுள்ளன.

துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆய்வுகளே இதற்கு காரணம். நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுவதால் சாலை, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. சென்னையில் உள்ள பாலங்கள் திமுக அரசின் பெயரை சொல்லக்கூடியவைகளாக உள்ளன. எந்த மழையையும் தாங்கும் அளவிற்கு சென்னை சாலைகள் மாறியுள்ளன.
சாலைகள், மேம்பால பணிகளை முடிப்பதற்கு போதுமான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நிதி ஒரு தடையில்லை. மாநில வளர்ச்சிக்கு சீரான சாலைகளும், தரமான மேம்பாலங்களும் அடிப்படை தேவையாக உள்ளன. சாலைகள் சீராக, தரமானவைகளாக உள்ளதற்கு ஆய்வு கூடங்கள் தான் காரணமானவைகளாக உள்ளன. சாலைகள் மற்றும் மேம்பாலங்களே ஒட்டுமொத்த வளர்ச்சியின் அடையாளங்களாக இருக்கின்றன.

இதனை கருத்தில் கொண்டுதான், கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அனைத்து சாலை மற்றும் பால பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினோம். அதன் விளைவாக பல பணிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அது ஓரளவிற்கு மனநிறைவை அளிக்கிறது. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் தொடர்ந்து தொய்வினையும் காண முடிகிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சாலைகளே எந்தவொரு நாட்டின்/ மாநிலத்தின் வளர்ச்சியில் நேரடி தொடர்பு வகிக்கும். ஏனெனில் பெரும்பாலான வணிகங்கள் சாலை போக்குவரத்தை சார்ந்தே உள்ளன. இதனால்தான் மத்திய அரசும் நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் நாடு முழுவதும் கொண்டுவர முனைப்புக்காட்டி வருகிறது. அந்த வகையில், நமது தமிழக அரசும் இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









