பயன்பாட்டிற்கு வந்த 5 புதிய வந்தே பாரத் ரயில்கள்.. எந்தெந்த ஊர்களை இவை இணைக்க போகுது?.. இதோ முழு விபரம்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய் கிழமை) ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக ஐந்து புதிய வந்தே பாரத் ரயில்களை நாட்டிற்காக அர்பணித்தார். விரைவான மற்றும் சொகுசான ரயில் பயண அனுபவத்தை வழங்கக் கூடிய ஓர் ரயிலே வந்தே பாரத் ரயில்கள் ஆகும்.
தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் ஐந்து வந்தே பாரத் ரயில்களும் சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டவை ஆகும். ரயில் பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஐந்து புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார்.

இந்த ஐந்தில் இரண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மற்றவை வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட இருக்கின்றன. வழித்தடங்களின் விபரம்: ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஓர் வந்தே பாரத் ரயில் இந்தூருக்கும், இரண்டாவது ஒன்று ஜபால்பூருக்கும் இயக்கப்பட இருக்கின்றது.
மூன்றாவது வந்தே பாரத் ரயில் ராஞ்சி-பாட்னா இடையிலும், நான்குவது வந்தே பாரத் ரயில் தர்வத்-பெங்களூரு இடையிலும், ஐந்தாவது ரயில் கோவாவின் மடகான்-மும்பையையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. "இந்த புதிய ரயில்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக சிறந்த பங்களிக்கப் போகிறது" என ரயில்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்தார்.

இது குறிப்பாக சுற்றுலா துறையில் மிக சிறப்பான பங்களிப்பை வழங்க இருக்கின்றது. ராஞ்சி-பாட்னா இடையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலே ஜார்காண்ட்-பீஹார் மாநிலங்களுக்கான முதல் வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் ராஞ்சி-பாட்னா இடையிலான போக்குவரத்து உறவை பலமடங்கு பலப்படுத்தும் என நம்பப்படுகின்றது.
வழக்கமான ரயில் பயணிப்பதைக் காட்டிலும் இந்த ரயிலில் பயணிக்கும்போது ராஞ்சி-பாட்னா பயணிகளால் ஒன்றரை மணி நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். இதேபோல், தர்வத்-பெங்களூரூ இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலும் பெருமளவில் நேரத்தை மிச்சப்படுத்த இருக்கின்றது. இந்த ரயில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் அதிக வேக ரயில்களைக் காட்டிலும் மிக அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது.

ஆகையால், அரை மணி நேரம் முன்கூட்டியே பயணிகளால் இலக்கைச் சென்று சேர முடியும். ஹூப்ளி, சிலிக்கான் சிட்டி போன்ற முக்கிய நகரங்களை இந்த ரயில் இணைக்கும். கோவா-மும்பை இடையே இயக்கப்பட இருப்பதும் அவற்றிற்கான முதல் வந்தே பாரத் ரயிலாகும். இது 586 கிமீ இடைவெளியை இணைக்க இருக்கின்றது.
சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில் நிலையத்தில் இருந்து கோவாவின் மட்கான் ரயில் நிலையம் வரை இது இயக்கப்பட இருக்கின்றது. தாதர், தானே, பன்வேல், கெட், ரத்னகிரி,கன்கவலி மற்றும் திவிம் ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையிலேயே இந்த வந்தே பாரத் அதன் பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல வழித்தடங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. ஆகையால், வெகு விரைவில் இந்தியாவின் ஒட்டுமொத்த இருப்புப் பாதைகளையும் வந்தே பாரத் ரயில்களே ஆளுகை செய்யும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. லோக்கல் ரயில்களுக்கு பதிலாகவும் வந்தே பாரத் ரயில்கள் அடிப்படையிலான மெட்ரோ ரயில்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் இந்தியன் ரயில்வேஸ் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களின் மீதான மோகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என்கிற கனவைக் கொள்ளும் அளவிற்கு வந்தே பாரத் ஃபேமஸ் ஆகி இருக்கின்றது. அதேவேளையில், மேற்கூரை ஒழுகுதல், மாட்டுடன் அடிக்கடி மோதலைச் சந்தித்தல் உள்ளிட்ட சலசலப்புகளுக்கும் இந்த ரயில் ஆளாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications









