பெட்ரோல், டீசலுக்கு நீங்கள் செலவிடும் தொகை இனி குறையும்... மோடி அரசு மாஸ் திட்டம்... என்ன தெரியுமா?
மோடி அரசின் அதிரடியான திட்டத்தால், எரிபொருளுக்காக நீங்கள் செலவிடும் தொகை குறையவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக மாறி கொண்டிருக்கும் ஒரு விஷயம் கச்சா எண்ணெய் இறக்குமதி. நம் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக தற்போது வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறைந்தபட்சம் ஒரு வாகனமாவது இல்லாத வீடே இல்லை என்ற நிலைமை இந்தியாவில் வெகு விரைவில் வரலாம்.

எனவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கிய எரிபொருட்களின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் இல்லாததே இதற்கு காரணம். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகை தெரிந்தால், உங்களுக்கு நிச்சயமாக தலை சுற்றி விடும். ஆம், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் ஒரு ஆண்டுக்கு தோராயமாக 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது!! 2,900 கோடி லிட்டர் பெட்ரோலும், 9,000 கோடி லிட்டர் டீசலும் நுகரப்படுகின்றன!!!

இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடிய விஷயம் என்பதால், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க தேவையான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

இது தவிர மாற்று எரிபொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது குறித்தும், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் அவசியம் குறித்தும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.

இந்தசூழலில் அதிரடியான திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது. இதன் மூலமாக நீங்கள் எரிபொருளுக்காக செலவிடும் தொகை கணிசமாக குறையும். மேலும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை உண்டாகும். அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையும் ஓரளவிற்கு குறையும்.

இந்தியா முழுவதும் மெத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கை மூலமாக ஒருவர் எரிபொருளுக்காக செலவிடும் தொகை குறைந்தபட்சம் 10 சதவீதம் குறையும். அதேபோல் வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு 30 சதவீதத்திற்கும் மேலாக கட்டுப்படுத்தப்படும்.

மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையில் ஒரு ஆண்டுக்கு ரூ.5,000 கோடி சேமிக்கப்படும். மெத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலையில் இந்தியாவில் இயங்கும் வாகனங்களில் 10 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் எத்தனாலை உற்பத்தி செய்வதற்கான செலவு சற்று அதிகம். ஒரு லிட்டருக்கு 42 ரூபாய் வரை வரும். அதே சமயம் மெத்தனால் அல்லது மெத்தில் ஆல்கஹாலின் விலை ஒரு லிட்டருக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகதான் இருக்கும்.

இந்தியாவில் மெத்தனால் பொருளாதார திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. அப்போதில் இருந்து அதனை நிர்வகித்து வருவபரான நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத் இது தொடர்பாக கூறுகையில், ''15 சதவீதம் மெத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளில் (M15 எரிபொருள்), 65 ஆயிரம் கிலோ மீட்டர் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மெத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளில் இயங்குவதற்கு, வாகனங்களில் எவ்வித மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை'' என்றார். தற்போதைய நிலையில் அஸ்ஸாம் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மெத்தனால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு நாளைக்கு 100 டன் மெத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தற்போதைய உற்பத்தி திறன் ஆகும்.

ஆனால் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இதனை ஆறு மடங்கு உயர்த்த முடியும் என, அதாவது ஒரு நாளைக்கு 600 டன்கள் உற்பத்தி செய்ய முடியும் என அஸ்ஸாம் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம் நம்புகிறது. அதே சமயம் மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், நிலக்கரியில் இருந்து மெத்தனாலின் வணிக ரீதியிலான உற்பத்தியும் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கென அம்மாநில அரசுகள் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியுள்ளன. இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். அவர்களுக்கு இந்த திட்டம் ஆறுதலை கொடுக்கலாம். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








