விரைவில் அறிமுகம் ஆகிறது மோடியின் மெகா திட்டம்... இனி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது எளிது...
மின்வாகனம் வாங்குவதுக்கு வங்கியிடம் இருந்து கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

மாசுபடுதல் என்னும் கொடூர நோயில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கி தவித்து வருகின்றன. இதனால், உலகம் முழுவதும் வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கும் விதமாக, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதேபோன்று, இந்திய அரசும் எரிபொருளால் இயங்கும் வாகனங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் தீவிர ஈடுபட்டு வருகின்றது. அதன்படி, எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதேநேரத்தில், மின்வாகனங்கள் அதிக அளவு விலைக் கொண்டிருப்பதாலும், சார்ஜ் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை இருப்பதாலும் மின்வாகனங்களைப் பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை அறிந்த மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
அதன்படி, மின்வாகனங்கள் வாங்குபவருக்கு குறிப்பிட்ட அளவு மானியம் வழங்கவும், நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மின்சார வாகன தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், வாகன தாயரிப்பு நிறுவனங்களுக்கு உற்பத்தி வரியில் சிறப்பு சலுகை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்வாகனங்களை பயன்படுத்துவதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரி வாகனங்களுக்கு சிறப்பு கடன் சேவையையும், வரி சலுகையையும் அளிக்க நிதித்துறை மற்றும் வருவாய் துறையிடம் பிரதமர் அலுவலகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, மின்வாகங்களை வாங்குவதுக்கு வங்கிகள் குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் கடன் அளிக்கும். மேலும், கடன் வாங்குவதில் சில வழிமுறைகளை மத்திய அரசு தளர்வு செய்வதால் வரும்காலங்களில் மின்வாகனங்களுக்கு கடன் பெறுவது சிக்கல் இல்லாமல் எளிதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலக அதிகாரி ரிபேந்த்ரா மிஷ்ரா கூறியதாவது, "பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களை மக்கள் தவிர்க்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக, குறைந்தபட்ச வட்டி விகிதம், குறைவான முன்பணம் உள்ளிட்ட சில சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அலுவலக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை, மின்வாகனங்களாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மின்வாகனமாக மாற்ற அந்த நிறுவனங்களுக்கு வரி சலுகைகளும் வழங்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் இயங்கிவரும் பெட்ரோல் நிலையங்களில் இ-மொபிலிட்டி எனப்படும் மின்வாகன சார்ஜ் நிலையங்களை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. இது, சரக்கு மற்றும் தனியாரின் வாகனங்கள் மின்வாகனங்களாக மாற வழிவகுக்கும். அதேபோல், மார்ச் மாதத்திற்குள் சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி நிலையங்களையும் நிறுவ கேட்டுக்கொள்ளப்பட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications









