ஓட்டுநர்களின் வயிற்றில் பாலை வார்க்கவிருக்கும் புதிய உத்தரவு... மோடி அரசின் அதிரடி...
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தடையாக இருக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்குவதற்கு, மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய மோட்டார் வாகன சட்டம் 1989, பிரிவு 8ன் படி, நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆகையால், அதற்கு குறைவான அல்லது படிப்பறிவில் பின் தங்கியுள்ள மக்களால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாத சூழல் நிலவி வருகின்றது.

இந்நிலையில், மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்த விதியில் புதிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தடையாக இருக்கும் குறைந்தபட்ச படிப்பறிவு என்ற விதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையின் மூலம், படிக்காமல் வேலையின்றி தவித்து வருபவர்கள் முறையாக ஓட்டுநர் பயிற்சி பெற்று, வாகன ஓட்டிகளாக பணி புரிய வழி வகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், அனைத்து மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, "வானம் ஓட்டும் திறன் பலர் பெற்றிருந்தாலும், போதிய கல்வி தகுதி இல்லாத காரணத்தால், சிலரால் ஓட்டுநர் உரிமம் பெற முடிவதில்லை" என ஹரியானா மாநிலம் சார்பாக கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், குறைந்தபட்ச கல்வி தகுதி என்ற விதியை நீக்கவும் அவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனால், பொருளாதாரம் ரீதியாக பின்தங்கியுள்ள மக்கள், ஓட்டுநர் பணியை மேற்கொண்டு அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த இது வழிவகை செய்யும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர்.

இத்துடன், தங்களது மாநிலத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு, வாகனத்தை இயக்கும் திறன் இருந்தும், கல்வி தகுதி இல்லாத காரணத்தால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாத சூழல் நிலவி வருகின்றது என்று வருத்தம் தெரிவித்தனர்.

இதன்காரணமாக, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தற்போது சிக்கலாக இருக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை மிக விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறைந்த கல்வி தகுதி இல்லாதவர்கள்கூட, ஓட்டுநர் உரிமம் பெறலாம் என்ற புதிய வரவேற்கதக்கதாக இருக்கின்றது. இருப்பினும் அதில் சில சிக்கல்கள் உள்ளன. நம் நாட்டில் உள்ள பெரும்பாலான சாலைகளில் ஆங்கில மற்றும் இந்தி மொழியிகளிலேயே பெயர் பலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதிலும், மாநிலங்களின் தனித்துவமான மொழிக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற மொழிகளை திணிக்கும்விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது.

ஆகையால், கல்வி தகுதி இல்லாதவர்களுக்கென பிரத்யேகமாக, வடிவமைக்கப்பட்ட சாலை குறித்த சமிக்ஞைகள் குறித்த அறிவை அவர்களுக்கு பயிற்சி மூலம் கட்டாயம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான, பிரத்யேக பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அதில் முறையான பயிற்சியைப் பெற்ற பின்னர், அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கினால் பின் விளைவுகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்குவதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க மிக பயனுள்ளதாக அமையும். மேலும், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் துறையில் உள்ள 22 லட்சம் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பவும் இது உதவியாக இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசயம், குறைந்த பட்ச கல்வி தகுதியை நீக்கினாலும் ஓட்டுநர்களின் பயிற்சி மற்றும் தேர்வில் எந்தவித சலுகையும் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என போக்குவரத்ததுறை அமைச்சகம் மிக கெடுபிடியாக தெரிவித்துள்ளது. ஆகையால், ஆர்டிஓ அதிகாரிகள் விதிக்கும் அனைத்து பரீட்சைகளிலும் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என கட்டாயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ராஜஸ்தான் மாநிலத்தின் உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை, அம்மாநில போக்குவரத்துறைக்கு விதித்திருந்தது.

சாலையில், பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளை சிலரால் படிக்க இயலாத காரணத்தால், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் அரங்கேறியதன் காரணமாக இந்த உத்தரவை அந்நீதிமன்றம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








