இதுக்கு பேரு தான் இராஜ வியூகம்... ரோடு முழுக்க இனி எலக்ட்ரிக் கார்களா தான் ஓட போகுது!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பொருளாதாரத்தில் வளர்ந்த ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்ததை பற்றி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இந்தியா மீது அமெரிக்க அரசு அதிகப்படியான வரிகளை விதித்ததை அடுத்து இந்திய பிரதமரின் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதால், உலகம் முழுவதும் இது கவனத்தை ஏற்படுத்தியது.
அந்த அளவிற்கு சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் சென்ற நாடுகளும், அங்கு அவர் சந்தித்த வெளிநாட்டு தலைவர்களும் முக்கியமானவர்களாக விளங்குகின்றனர். குறிப்பாக, சீன அதிபர் உடன் இந்திய பிரதமர் காட்டிய நெருக்கம் இந்தியர்கள் பலரை ஆச்சிரியப்படுத்தியது. ஏனெனில், சீன பொருட்களுக்கு, மொபைல் செயலிகளுக்கு தடை என சமீப காலமாகவே இந்திய அரசு சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தது.

ஆனால், தற்போது சீனா உடன் இந்திய காட்டும் நெருக்கம் பல விஷயங்களுக்கு கதவை திறந்துவிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுள் முக்கியமானது, அரிதான புவி தனிமங்களை சீனாவில் இருந்து பெறுவதற்கான சிறப்பு அனுமதியை பெறுவதும் ஆகும். இதை பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், முதலில் அரிதான புவி தனிமங்கள் என்றால் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
அரிதான புவி தனிமங்கள் என 17 விதமான தனிமங்களை வேதியியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர். ஸ்காண்டியம், இட்ரியம் உள்ளிட்டவை அவற்றுள் முக்கியமானவை ஆகும். இந்த அரிதான புவி தனிமங்கள் உலகின் மிகவும் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றன. அந்த மிகவும் சில பகுதிகள் அதிகமாக இருப்பது சீனாவில் ஆகும்.

இந்த தனிமங்களை பல வருடங்களுக்கு முன்னரே கண்டுப்பிடித்து விட்டனர் என்றாலும், இவற்றை பெறுவதில் சமீப காலமாக பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. புவியில் அத்தகைய தனிமங்கள் கிடைப்பது குறைந்துக் கொண்டே வருவது ஒரு காரணம் என்றாலும், அதைவிட முக்கியமான காரணம் இந்த தனிமங்களை சீனாவில் இருந்து கொண்டு செல்வதில் சில மாதங்களுக்கு முன் சீன அரசு அதிரடியாக கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ஆகும்.
எந்தெந்த நாட்டு நிறுவனங்களுக்கு இந்த தனிமங்களை வழங்குவது என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என்பதுபோல் இந்த கட்டுப்பாடுகளை சீனா கொண்டுவந்தது. இந்த அரிதான புவி தனிமங்கள் பயன்பாடு ஆனது எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல் (Automobile) என நிறைய துறைகளில் உள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு குறிப்பிட்ட அரிதான புவி தனிமங்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

ஆனால், சீன அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்ததால் இந்தியா உள்பட உலகில் பல நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தற்போதைய சூழலில்தான் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற உலக அரசியல் தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் சமீபத்தில் கலந்துக் கொண்டார்.
இதனால், அரிதான புவி தனிமங்களை பெறுவதில் இந்திய நிறுவனங்கள் எதிர்கொண்டுவரும் சவால்கள் குறித்து உலக தலைவர்கள் மத்தியில் இந்திய பிரதமர் ஆலோசித்து இருப்பார் என நம்புகிறோம். ஏனெனில், அந்த அளவிற்கு அரிதான புவி தனிமங்கள் தட்டுப்பாடு சமீப காலமாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கூட இந்த பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தெரியாமல் விழி பிதுங்கி நின்றது. "முடிந்தவரையில் இந்த பிரச்சனையை மாற்று வழிகளில் எதிர்கொள்வோம், அரிதான புவி தனிமங்களுக்கு மாற்றாக வேறு ஏதேனும் தனிமங்களை பயன்படுத்த முயற்சிப்போம்" என மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறியது இப்போது நினைவிற்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரஷ்ய உடன் எப்போது இந்தியா நெருக்கம் காட்ட துவங்கியதோ அப்போதில் இருந்தே இந்தியாவில் அரிதான புவி தனிமங்களின் தட்டுப்பாடு குறைய துவங்கிவிட்டது போல் தெரிகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதன் முதல் எலக்ட்ரிக் காரான இ-விட்டாரா (e-VITARA)-இன் உற்பத்தியை துவங்கியதுதான் அதற்கு சாட்சியாகும். இதனை தொடர்ந்து, ரஷ்ய மற்றும் சீன அதிபர்களை இந்திய பிரதமர் நேரில் சந்தித்து நட்புறவுடன் பேசியிருப்பதன் மூலம் வரும் காலங்களில் இந்த தட்டுப்பாடு பிரச்சனை மீண்டும் ஏற்படாது என நம்புவோம்.


Click it and Unblock the Notifications









