பழைய வண்டிகளை அழிக்க ஸ்கெட்ச் போட்ட அரசு! இவ்ளோ வண்டிகளை தூக்க போறாங்களா! கலக்கத்தில் உரிமையாளர்கள்!
இந்தியாவின் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னைக்கு பழைய வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணமாக இருக்கின்றன. எனவே பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் இந்தியாவில் உத்வேகம் பெற்று வருகிறது. இதனை ஆங்கிலத்தில் 'வெய்கில் ஸ்கிராப்பிங்' (Vehicle Scrapping) என்பார்கள். பயன் இல்லாத ஒன்றை ஒழித்து கட்டுவதற்கு பெயர்தான் ஸ்கிராப்பிங். அதாவது அழிப்பது.
பழைய வாகனங்களை அழிப்பதால், நாட்டிற்கும், வாகன நிறுவனங்களுக்கும் பல்வேறு வகைகளில் நன்மை கிடைக்கும். காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என்பது முதல் நன்மை. புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்பது இரண்டாவது நன்மை. பழைய வாகனங்களில் இருந்து வாகன உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கும் என்பது மூன்றாவது நன்மை. இதுபோன்ற காரணங்களால்தான் இந்தியாவில் தற்போது பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் உத்வேகம் பெற்று வருகிறது.

இந்த சூழலில் உத்தர பிரதேச மாநில அரசு பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்திற்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில், பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அதிகளவில் திறக்கவும் அனுமதி கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் நொய்டா நகரில், பதிவு செய்யப்பட்ட வாகன அழிப்பு மையங்களின் (Registered Vehicle Scrapping Facilities - RVSF) எண்ணிக்கை வெறும் 2 மட்டுமே.
இதில் ஒன்று நொய்டாவிலும், மற்றொன்று கிரேட்டர் நொய்டாவிலும் அமைந்துள்ளது. ஆனால் உத்தர பிரதேச அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளதால், அங்கு பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது. பழைய வாகனங்களை அழிப்பதால், தனிப்பட்ட முறையில் என்ன நன்மை கிடைக்கும்? என நீங்கள் கேட்பது புரிகிறது. பழைய வாகனங்களை அழிப்பவர்களுக்கு, புதிய வாகனங்களை வாங்கும்போது உத்தர பிரதேச அரசு சலுகைகளை வழங்கவுள்ளது. இதில், வரி (Tax) தள்ளுபடி முக்கியமான ஒன்றாகும்.
அதாவது ஒருவர் பழைய காரை அழித்து விட்டு, புதிய காரை வாங்கினால், அரசு அவருக்கு 15 சதவீத வரி தள்ளுபடியை வழங்கும். வரியில் தள்ளுபடி வழங்கப்படுவதால், புதிய காரின் ஆன் ரோடு விலை குறையும். இதுகுறித்து நொய்டா போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ''பழைய வாகனங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை அழிக்க முன் வர வேண்டும். பழைய வாகனங்கள் அழிக்கப்படும்போது, சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்.
புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது, அந்த சான்றிதழை காண்பித்தால், வரியில் 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்த சான்றிதழ் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதாவது பழைய வாகனங்களை அழித்து விட்டு, அடுத்த ஒரு வருடத்திற்குள் புதிய வாகனங்களை வாங்கினால், வரியில் 15 சதவீதம் தள்ளுபடி பெறலாம். அதே நேரத்தில் வர்த்தக வாகனம் ஸ்கிராப் செய்யப்பட்டால், அதாவது அழிக்கப்பட்டால், புதிய வாகனம் வாங்கும்போது, வரியில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்'' என்றனர்.
நொய்டா நகரில் தற்போதைய நிலையில், 15 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய பெட்ரோல் (Petrol) வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக உள்ளது. அதே நேரத்தில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய டீசல் (Diesel) வாகனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உள்ளது. அதாவது நொய்டா நகரில் ஒட்டுமொத்தமாக சுமார் 1.20 லட்சம் பழைய வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை சாலையில் இயக்குவதற்கு தடை விதிக்குமாறு, உத்தர பிரதேச மாநில அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) உத்தரவிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வாகனங்கள் படிப்படியாக அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த சூழலில்தான் நொய்டா நகரில் பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தர பிரதேச அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. பழைய வாகனங்களை அழிப்பதுடன், எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும், காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு உத்தர பிரதேச அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








