டூ-வீலர்களை பைக் டாக்சியாக பயன்படுத்தலாமா கூடாதா? இந்த விஷயத்தில் மத்திய அரசின் மனநிலை என்ன?
இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்களை சவாரி வாகனமாக பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி இல்லை என்றே இதுநாள் வரை நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இதனாலேயே நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆட்டோ, கார் மற்றும் பைக் டாக்சி ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.
அதேவேளையில், இந்தியாவில் இளைஞர்கள் பலர் தங்களது வாழ்வாதரத்தை பைக் டாக்சியை நோக்கி நகர்த்தத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே பைக் டாக்சி என்பது சேவை லீகலானதா இல்லையா என்பது பற்றிய விளக்கத்தை மத்திய அரசு வழங்கி இருக்கின்றது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவுரைகள் என்ன? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மோட்டார் வாகன சட்டம் 1988இல் பிரிவுகள் பற்றியே விளக்கமளித்து இருக்கின்றது. மோட்டார் சைக்கிளையும் கேரேஜ் வாகனங்களின் வரையறைக்குள் கொண்டு வர முடியும் என்பதையே அது தற்போது தெளிவுப்படுத்தி இருக்கின்றது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, கேரேஜ் வாகனங்களின் வரையறைக்குள் கொண்டு வரப்படும் வாகனங்களை சவாரி வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆகையால், இத்தனை நாட்களாக பைக் டாக்சி சந்தித்து வந்த பிரச்னை ஒரு வழியாக முடிவிற்கு வந்திருக்கின்றது. அதாவது, இனி வரும் நாட்களில் ஆட்டோ, கார்கள் மற்றும் பிற வாகனங்களைப் போலவே மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றையும் பயணிகளை ஏற்றிச் செல்லும் சவாரி வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதுகுறித்த அறிவுரையையே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அது, சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மோட்டார்சைக்கிள்களை டாக்சிகளாக பயன்படுத்திக் கொள்ள அனுமதியை வழங்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றன. இதை வைத்து பார்க்கையில் மோட்டார்சைக்கிள்கள் கான்ட்ராக்ட் வாகனமாக இயங்குவதற்கு தகுதியற்றவை என்பதை வெளிக்காட்டுகின்றது.
இந்த விஷயத்திலேயே ஓர் தெளிவை ஏற்படுத்தி இருக்கின்றது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம். மோட்டார் வாகன சட்டம் பிரிவு 2(28)இன் கீழ், நான்கு சக்கரங்களுக்கும் குறைவான வீல்களைக் கொண்ட 25 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்களையும் கேரேஜ் வாகனங்களாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.
எனவே, மோட்டார் வாகன சட்டம் 2(7) பிரிவின்கீழ் மோட்டார் சைக்கிளும் கேரேஜ் வாகனங்களின் வரம்பிற்குள் வரும் என தெரிகின்றது. இதையே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமும் அதன் ஆலோசனையில் தெரிவித்து இருக்கின்றது. கான்ட்ராக்ட் கேரேஜ் வகை வாகனங்களை, அந்த வாகனத்தை ஓர் நபரால் முழுமையாக வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும்
இதற்கு கட்டணத்தை விதிகளுக்கு உட்பட்டு பெற்றுக் கொள்ளலாம். பயண தூரம் அல்லது நேரத்தைப் பொருத்து அந்த கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட அல்லது குறிப்பிடப்படாத ரூட்களுக்கு சவாரிகளை ஏற்றிக் கொள்ள முடியும். இத்தகைய செயலுக்கான விண்ணப்பங்களையே இருசக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதற்கான அனுமதியை வழங்கவே மத்திய அரசு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுரையை வழங்கி இருக்கின்றது.
இந்த அறிவிப்பானை வருவதற்கு முன்னரே டெல்லி உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் அந்தந்த மாநில அரசுகள் இரண்டு சக்கர வாகனங்களை பைக் டாக்சியாக இயக்கிக் கொள்வதற்கான அனுமதியை வழங்கும் பணியை மேற்கொள்ள தொடங்கிவிட்டன. குறிப்பாக, டெல்லி அரசு மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு பைக் டாக்சியாக இயக்கிக் கொள்வதற்கான அனுமதியை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
ஆனால், மத்திய அரசின் அறிவிப்பால் இனி வரும் நாட்களில் 25 சிசிக்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட பெட்ரோல் டூ-வீலர்களையும் பைக் டாக்சியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. கடந்த காலங்களில் போக்குவரத்து காவல்துறையினர், இது விதிமீறிய செயல் என கூறி குறிப்பிட்ட சில பைக் டாக்சிகளை சிறைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக பல பட்டதாரி இளைஞர்கள் பைக் டாக்சியை நோக்கி தங்களின் வாழ்வாதரத்திற்கான வருமானத்தை திரட்டத் தொடங்கி இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே பைக் டாக்சி பற்றி தெளிவை மத்திய அரசு தற்போது வழங்கி இருக்கின்றது. இது பைக் டாக்சியை நம்பி இருப்பவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








