"உசுரும் முக்கியம், மைலேஜும் முக்கியம்"... டயர் உற்பத்தியாளர்களுக்கு புதிய கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு..
பயணங்களைப் பாதுகாப்பானதாகவும், விபத்துகளின் எண்ணிக்கையும் குறைக்கும் பொருட்டு டயர் உற்பத்தியாளர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டும் மிக அதிக தீவிரம் காட்டி வருகின்றன. நாட்டை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் வகையில் மிகக் கடுமையான புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து விதிமீறல்களே பெரும்பாலான சாலை விபத்துகளுக்கும், உயிரிழுப்புகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது.

எனவேதான் வாகனம் சார்ந்தும், சாலை போக்குவரத்து சார்ந்தும் பல்வேறு அதிரடி விதிகள் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

அய்யய்யோ..! இன்னொரு புதிய விதியா என பதற வேண்டாம். இது டயர் உற்பத்தியாளர்களுக்கான அறிவிப்பாகும். பயணங்களைப் பாதுகாப்பானதாகவும், விபத்துகளின் எண்ணிக்கையும் குறைக்கும் பொருட்டு டயர் உற்பத்தியாளர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்த அறிவிப்பையே தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்றது. எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறந்த பிரேக்கிங் வசதியை வழங்கக் கூடிய வகையிலான டயர்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் டயர் விற்பனையில் ஈடுபடும் அனைத்து டயர் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இந்த புதிய விதி பொருந்தும். இதுகுறித்து டைம்ஸ்நவ் ஆங்கில தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "எதிர்ப்பு உருளும் (rolling resistance), சுழற்சியின்போது ஏற்படும் ஒலி மாசை (rolling sound emission) குறைத்தல் மற்றும் ஈரமான சாலையிலும் (wet braking) சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் என்பதே அமைச்சகம் வெளியிட்டிருக்கும் டயர் உற்பத்தியாளர்களுக்கான புதிய அறிவிப்பின் நோக்கம்" என தெரிவித்துள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதலை டயர் உற்பத்தி நிறுவனங்கள் வரும் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த (பின்பற்ற) வேண்டும் என கூறியிருக்கின்றது. பைக், கார், பேருந்து மற்றும் கன ரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்குமான டயருமே புதிய வழிகாட்டுதலின்படியே உருவாக்கப்பட வேண்டும் என திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

உள் நாட்டில் டயர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு டயர்களை விற்பனைச் செய்யும் நிறுவனம் இந்த புதிய கட்டாயம் பின்பற்ற வேண்டும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும், அதிக எரிபொருள் செலவைக் குறைக்கும் பொருட்டும் இந்த புதிய விதியை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்றது. இதனால், மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டயர்கள் அதிக பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கக் கூடிய தயாரிப்புகளாக கிடைக்கும்.

தற்போது, இந்தியாவில் டயர் உற்பத்தியாளர்களுக்கு ஒற்றை சான்றிதழ் மட்டுமே தேவைப்படுகிறது. அது பிஐஎஸ் தர சான்றிதல் ஆகும். இது டயர் தரக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வருகிறது.


Click it and Unblock the Notifications








