என்னது எடைக்கு ஏற்ப டோல் கட்டணம் வசூலிக்க போறாங்களா!.. ஆண்டு முடிவதுவுமா இப்படி ஒரு தகவல் வெளியாகணும்!
டோல்கேட்டில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் சிஸ்டமே ஃபாஸ்டாக் ஆகும். இது நடைமுறைக்கு வந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிப்பதில் சிக்கல் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே டோல்கேட் கட்டணம் வசூலிப்பதில் புதிய முறை ஒன்றை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எடைக்கு ஏற்ப கனரக வாகனங்களில் கட்டணம் வசூலிப்பதற்கே அமைச்சகம் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த விதி கனரக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிகின்றது. கனரக வாகனங்கள் சில விதிக்கப்பட்ட எடையை தாண்டி பொதிகளை ஏற்றிச் செல்வதாகவும், இதனால், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக புகார்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) எடையின் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. கனரக வாகனங்களில் இந்த அளவில் மட்டுமே சரக்குகளை ஏற்றிச் செல்ல வேண்டும் ஏற்கனவே அளவீடு வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், அதனை பெரும்பாலான வாகனங்கள் கடைப்பிடிப்பதே இல்லை.
இந்த நிலையிலேயே இந்த முறைகேடைத் தவிர்க்கும் பொருட்டு கனரக வாகனங்களின் எடைக்கு ஏற்ப டோல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என ராஜ்யசபா உறுப்பினர் விஜயசாய் ரெட்டி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்து இருக்கின்றது. இந்த பரிந்துரையின்பேரிலேயே தற்போது ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகையால், விரைவில் டோல்கேட்டுகளுக்கு அருகில் எடை மேடை அமைக்கப்பட்டு அதன் வாயிலாக கனரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல அனுமதிக்கப்பட்டு, அங்கு காட்டப்படும் எடைக்கு ஏற்ப டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கனரக வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் சில எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன.
இதனால், டோல்கேட்டுகளில் நீண்ட நேரம் வாகனம் காத்திருக்க வேண்டி இருக்கும். மேலும், இதில் இன்னும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட நேரிடலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, ஃபாஸ்டாக் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் சில முக்கிய டோல் பிளாசாக்களில் வாகன நெரிசல் மிகுந்தக் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே கனரக வாகனங்களுக்கு என தனி திட்டத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வகுக்கத் தொடங்கி இருக்கின்றது. தற்போது, வாகனத்தின் அச்சுகள் அடிப்படையிலேயே கனரக வாகனங்களுக்கான டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. எந்த அளவு அதிக பொதியை கனரக வாகனங்கள் ஏற்றி வந்தாலும், ஒரே மாதிரியான கட்டணமே வசூலிக்கப்படுகின்றது.
ஆனால், இந்த நிலையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக சுமையை ஏற்றிச் செல்லும் வாகனங்களினால் நிலவும் அச்சுறுத்தலைத் தவிர்க்க அமைச்சகம் விரைவில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நீண்ட நாட்களாக பயனற்றுக் காணப்படும் எடைமேடைகளை சரி செய்யவும் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த எடை மேடைகள் வாயிலாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு அவற்றின் விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட இருக்கின்றது. அரசு நிர்ணயித்த எடையை விட கூடுதல் எடையை கனரக வாகனங்கள் கொண்டிருக்கும் எனில் அந்த குறிப்பிட்ட வாகனத்தின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008ன் படி, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச மொத்த எடைக்கு மேல் ஏற்றப்படும் வாகனங்கள், அந்த அதிகப்படியான சுமையை அகற்றும் வரை தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தவோ அல்லது டோல் பிளாசாவைக் கடக்கவோ அனுமதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விதி பின் வரும் நாட்களில் மிகக் கடுமையாக பின்பற்ற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் இது வழிவகுக்கும். அதிக சுமைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அரங்கேறும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, அதிகம் எடையை கனரக வாகனங்கள் சுமந்து செல்வதனால் அவை கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்தித்தல் அல்லது கவிழ்தல் போன்ற பேராபத்துகளைச் சந்திக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிலை அந்த குறிப்பிட்ட வாகனத்திற்கு மட்டுமின்றி மற்ற வாகனங்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதனாலேயே கூடுதல் பாரம் சுமந்து செல்லும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது. அதிக பொதியை சுமந்து செல்லும் வாகனங்களால் பின்னால் வரும் வாகனங்களால் முன்னால் உள்ள சாலையைப் பார்ப்பதிலும் சிக்கலில் நிலவுகின்றது. இந்த நிலையை முற்றிலும் அகற்றவே எடைக்கு ஏற்ப கட்டணம் என்கிற விதி நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









