இனி நல்லா மைலேஜ் தரும் வாகனங்களைத்தான் விற்பனை செய்யனும்... புதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு!
இந்தியாவில் இனி பயணிகள், சரக்கு, என அனைத்து வாகனங்களுக்கான எரிபொருள் செலவிடுவதற்கான தரச்சான்றைக் கொண்டு வர மத்திய போக்குவரத்துத் துறை முயன்று வருகிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

தற்போது இந்தியாவிற்குள் விற்பனையாகும் வாகனங்களுக்குக் குறிப்பிட்ட விதிமுறைகள் இருக்கிறது. டிரைவிங் காக்பிக் வாகனத்தின் வலது புறம் தான் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகள் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது மத்திய அரசு வாகனங்கள் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பதிலும் கட்டுப்பாடு கொண்டு வர புதிய சட்டத்தைக் கொண்டு வர முயன்று வருகிறது.

அதன்படி மத்திய போக்குவரத்துத் துறை இந்திய மோட்டார் வாகன சட்டம் 1989ல் ஒரு திருத்தம் கொண்டு வர முயல்கிறது. அதன்படி இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்கள் எல்லாம் எரிபொருள் செலவு தரச்சான்று பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான நோட்டிஃபிகேஷனை அறிவித்துள்ளது.

அதாவது இனி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள லைட்,மீடியம், ஹெவி, என அனைத்து தரப்பு வாகனங்களும், சொந்த பயன்பாடு கமர்ஷியல் பயன்பாடு, இந்தியாவில் தயாரித்தது, வெளிநாட்டில் தயாரித்தது என எந்த பயன்பாட்டு வாகனமாக இருந்தாலும் சரி எரிபொருள் செலவு தரச்சான்று பெற்ற பின்பு தான் விற்பனைக்கு வரவேண்டும் என அந்த சட்டம் சொல்கிறது.

இந்தியாவிற்குள் நல்ல மைலேஜ் தரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட வேண்டும் என்பதைக் கொண்டு வருவதாகற்காக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு குறைப்பதற்காகவும், இந்தியாவில் பெட்ரோல்/ டீசல் தேவையைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த எரிபொருள் பயன்பாடு தரச்சான்று என்பது இந்தியாவிற்குப் புதிதல்ல இது ஏற்கனவே எம்1 கேட்டகிரி வாகனங்களுக்கு இருக்கிறது. 8 பயணிகளுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் பயணிகள் வாகனம் மற்றும் 3.5 டன் எடைக்கு மேல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு இருக்கிறது. இந்த தரச்சான்று என்பது சராசரி எரிபொருள் பயன்பாட்டைப் பொருத்து வழங்கப்படும்.

அதாவது ஒரு டிரக் சாலையில் சீராக 40 மற்றும் 60 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். இதுவே பயணிகள் வாகனம் என்றால் 50 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். எவ்வளவு தூரம் பயணித்துள்ளது. இதற்கு எவ்வளவு எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளது என்பதைக் கணக்கிட்டுத் தரச்சான்றின் படி இருக்கிறதா எனப் பார்த்து இந்த சான்று வழங்கப்படும்.

மத்திய அரசு தற்போது இந்த நடைமுறையை வரும் 2023 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்குக் கொண்டு வர முயன்று வருகிறது. இந்த தரச்சான்றைப் பெற வேண்டும் என்றால் மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் இன்ஜினிலேயே மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். இது மோட்டார் வாகன தயாரிப்பாளர்களுக்குப் பெரிய தலைவலி, இருந்தாலும் நாட்டின் நலன் கருதி இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








