வேற்று மாநிலங்களில் குடிபெயர்வர்களுக்கான புதிய வாகன பதிவு முறை அறிமுகம்... என்ன சொல்கிறது புதிய விதி!!
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வேற்று மாநிலங்களில் குடிபெயர்வர்களுக்காக புதிய வாகன பதிவு முறையை முன்மொழிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

பணி நிமித்தமாக சொந்த மாநிலத்தை விட்டு வேற்று மாநிலங்களில் குடிபெயர்பவர்கள் எந்தவொரு சிக்கலுமின்றி அவர்களின் வாகனத்தைப் பயன்படுத்தும் புதிய விதியை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முன் மொழிந்துள்ளது.

அதாவது, புதிய வாகன மறு-பதிவு முறையை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் வாகனங்கள் மறு பதிவு செய்வதை இப்புதிய விதி கட்டாயம் என கூறுகின்றது. இதற்கென 'ஐஎன்' என தொடங்கும் சீரியல்களை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. அதாவது, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்றால் அதில் 'டிஎன்' எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.

உதாரணமாக, இந்த டிஎன் கொண்ட வாகனம் கர்நாடகாவிற்கோ அல்லது கேரளாவிற்கோ இடம் பெயருமானால் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் முன் மொழியப்பட்டிருக்கும் புதிய இடம் பெயர்வு திட்டத்தின்கீழ் மறு-பதிவு செய்ய வேண்டும்.

அப்போது ஐஎன் என தொடங்கும் எழுத்துக்கள் அடங்கிய தற்காலிக பதிவெண் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இதைக் கொண்டு குடிபெயர்ந்த மாநிலத்தில் எந்தவொரு தங்கு தடையுமின்றி அந்த வாகனத்தால் வலம் வர முடியும். இதையே புதிய விதி முன் மொழிகின்றது.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, வேற்று மாநில பதிவெண் கொண்ட வாகனம் 12 மாதங்கள் வரை சொந்த மாநிலம் அல்லாத மாநிலங்களில் இயங்கலாம் என்று கூறுகின்றது. இதனையே புதிய விதி மாற்றியமைத்திருக்கின்றது.

பான்-இந்தியா திட்டத்தின்கீழ் இப்புதிய மறு-பதிவு திட்டத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நாட்டில் நடைமுறைக்குக் கொண்டு வருகின்றது. தற்போது அமைச்சகம் அறிமுகம் செய்திருக்கும் இப்புதிய திட்டம் முன்னோட்டமாக அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகையால், முதலில் பாதுகாப்பு துறை, மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில பிஎஸ்யூ மற்றும் தனியார் நிறுவனங்கள் (ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளைக் கொண்டவை) ஆகியவற்றின் ஊழியர்களுக்கே இப்புதிய பொருந்தும்.

இந்த திட்டம் குறிப்பாக அரசு அல்லது தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இடமாற்றம் செய்யக்கூடிய வேலைகளைக் கொண்ட அரசு அல்லது தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் என்பது ஒரு பொதுவான விஷயம்.

அத்தகைய இட மாற்றங்களை அதிகம் பெறும் ஊழியர்கள் வேற்று மாநிலத்தில் எந்த சிக்கலுமின்றி சுற்றி வர நிச்சயம் இவ்விதி உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சொந்த மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு மாறும் வாகனத்தின் பதிவை மறு-பதிவு செய்வதில் பல்வேறு குழப்பங்களும், சிக்கல்களும் நிலவி வருகின்றன. இதனை புதிய சுலபமாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான வரி இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது இருமடங்காக வசூலிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








