இன்னும் 3 மாசம்தான்.. இருக்க எல்லா ஃபாஸ்டேக்கை தூக்க போறாங்க? செயற்கைகோளை பயன்படுத்தி கட்டணம் வசூலிக்க பிளான்!
சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் ஃபாஸ்டாக் திட்டத்தை கடந்த 2020ம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. டோல்கேட்டுகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை மற்றும் நேர விரையத்தைத் தவிர்க்கும் நோக்கிலேயே இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், நாட்டின் சில பகுதிகளில் முறைகேடுகள் இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. மேலும், நேரமும் சில பகுதிகளில் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, நகரங்களுக்கு அருகில் இருக்கும் சுங்கச் சாவடிகளிலேயே அதிக அளவு நேரம் எடுத்துக் கொள்வதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அடுத்த மூன்று மாதத்திற்குள் டோல்கேட் கட்டணம் வசூலிப்பில் புதிய முறைய மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிதாக சேட்டலைட் வாயிலாக டோல் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தையே அரசு நடைமுறைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
இதனை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். அதாவது, வருகின்ற 2024 மார்ச் மாதத்திற்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை அமல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஃபாஸ்டேக் அறிமுகத்தால் கணிசமான அளவில் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த காத்திருப்பு நேரத்தை மேலும் குறைக்கும் விதமாக அரசு புதிய முறையை டோல்கட்டணம் வசூலிப்பில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதுவே செயற்கைக்கோள் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறையாகும்.
இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி சராசரியாக ஓர் வாகனம் டோல்கேட்டில் கட்டணம் செலுத்த 47 வினாடிகள் வரை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகின்றது. முந்தைய நாட்களில், அதாவது, ஃபாஸ்டேக் பயன்பாட்டிற்கு வராத காலகட்டத்தில் 714 வினாடிகள் வரை ஒரு வாகனம் கட்டணம் செலுத்த எடுத்துக் கொள்ளும்.

இத்தகைய நீண்ட நேரத்தையே ஃபாஸ்டேக் கணிசமாக குறைத்து இருக்கின்றது. ரொக்கமாக கட்டணம் செலுத்துவதில் இதுபோன்று இன்னும் பல்வேறு சிக்கல்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் காரணத்தினாலேயே ஃபாஸ்டேக் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. மேலும், இது இல்லாத வாகனங்களுக்கு அபராதம் மற்றும் இருமடங்கு அதிகம் கட்டணம் விதிக்கப்பட்டது.
இதேபோல் மத்திய அரசு நாடு புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதிலும் அதிக தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, இதுவரை 5,248 கிலோ மீட்டருக்கான சாலை புதிதாக அமைக்கப்பட்டு இருக்கின்றது. சென்ற நவம்பரைக் காட்டிலும் இது அதிகம் ஆகும்.
இதே நவம்பரில் சென்ற ஆண்டு மத்திய அரசு 4,766 கிமீ தூரத்திற்கான புதிய சாலைகளை மட்டுமே அமைத்திருந்தது. மேலும், இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் மத்திய அரசாங்கம் 12 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலையை அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக உலக வங்கியின் நிதியை அது நாடி இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சேட்டலைட் வாயிலாக கட்டணம் வசூலிப்பதனால் முறைகேடுகள் நடப்பதை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என மத்திய அரசு நம்புகின்றது. அதேவேளையில், கொள்ளையில் ஈடுபடுபவர்கள் புதிய புதிய யுக்திகளைப் பயன்படுத்தி தங்களின் கை வரிசைகளைக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதுதவிர, டோல்கேட்டுக்கே விபூதி அடிக்கின்ற வகையில், தனியார் கள்ள டோல்கேட்டுகள் உருவாக்கப்பட்டு மலிவு விலையில் வாகனங்கள் கடக்கும் சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









