சாலை விபத்துக்களில் காயமடைபவர்களுக்கு உடனடி சிகிச்சை... புதிய திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு...
சாலை விபத்துக்களில் காயம் அடைபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் சாலை விபத்துக்களில் சிக்கி காயம் அடைபவர்களுக்கு, உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

விபத்து நடைபெறும் பட்சத்தில், உடனடியாக காவல் துறை மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் கிடைக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய அதிநவீன திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் தயாராக இருப்பது இந்த புதிய திட்டத்தின் கீழ் உறுதி செய்யப்படும். சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருவதை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அரமனே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''காவல் துறை, ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவமனைகள் ஒரே நெட்வொர்க்கின் மூலமாக இணைக்கப்பட்டால், சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க முடியும்'' என்றார். இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

உலகிலேயே சாலை விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. சாலை விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்க தவறுவதும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாக, இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை உயர்த்தியிருப்பதை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம்.

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 3.86 சதவீதம் குறைந்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்துடன் இன்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் போன்ற பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வாகனங்களில் இடம்பெறுவதை கட்டாயமாக்கி வருவதும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதன் மூலம் வாகனங்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளுடன், வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றினால் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.


Click it and Unblock the Notifications








