மரியாதையே போயிரும்... விமானத்தில் இதையெல்லாம் செஞ்சராதீங்க... மத்தவங்க ரொம்ப ச்சீப்பா நெனச்சுருவாங்க!
விமானத்தில் நீங்கள் செய்யும் ஒரு சில விஷயங்கள் மற்றவர்களை முகம் சுளிக்க வைத்து விடும். எனவே அவற்றை செய்யாமல் தவிர்த்து விடுவதுதான் நல்லது.

விமானங்களில் பயணம் செய்யும்போது நாம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்ற பயணிகள் நம்மை மதிப்பார்கள். ஆனால் ஒரு சிலர் இதனை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், மற்றவர்களை எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். அப்படி விமானங்களில் ஒரு சிலர் செய்யக்கூடிய சேட்டைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதில் எதையும் நீங்கள் செய்து விடக்கூடாது என்பதுதான் இந்த செய்தியை நாங்கள் வழங்கியுள்ளதற்கான முக்கிய காரணம். இந்த விஷயங்களை நீங்கள் தவிர்க்கும்பட்சத்தில், மற்ற பயணிகளிடம் உங்கள் மீது சிறப்பான அபிப்ராயம் ஏற்படும். மேலும் உங்கள் மீதான மரியாதையும் கூடும். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்வோம்.

விமானங்களில் ஒரு சிலர் திடீரென தங்கள் காலில் அணிந்திருக்கும் ஷாக்ஸ்களை கழற்றி விடுகிறார்கள். இது துர்நாற்றம் பரவ வழிவகுக்கிறது. நீங்கள் இப்படி செய்தால், மற்ற பயணிகள் எரிச்சல் அடைவார்கள் என்பது 100 சதவீதம் உறுதி. அதேபோல் ஒரு சில பயணிகள் மற்றவர்களிடம் அதிகம் பேசி கொண்டேயிருப்பார்கள். அறிமுகம் செய்து கொள்ளும் வகையில் கொஞ்சம் பேசுவது ஓகேதான்.

ஆனால் தொனதொனவென நீங்கள் பேசி கொண்டேயிருந்தால், அது மற்ற பயணிகளுக்கு எரிச்சலூட்டும். அதேபோல் ஒரு சிலர் விமானத்தில் மிகவும் சத்தமாக பாடல்களை கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுவும் மற்ற பயணிகளை எரிச்சலடைய செய்யும். எனவே மிதமான சத்தத்தில், ஹெட்போன்கள் மூலம் உங்களுக்கு மட்டும் கேட்கும்படி பாடல்களை கேளுங்கள்.

இதுதவிர விமானம் தரையிறங்கியதும் சத்தமாக கை தட்டும் பழக்கமும் சிலரிடம் காணப்படுகிறது. இதுவும் மற்றவர்களை எரிச்சல் அடைய செய்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் பஸ்களில் பயணம் செய்யும்போது, உங்கள் ஸ்டாப் வந்ததும், கை தட்டி டிரைவரை பாராட்டுகிறீர்களா? இல்லைதானே. பிறகு எதற்கு பைலட்டை மட்டும் கை தட்டி பாராட்ட வேண்டும்?

எனவே விமானத்தில் தேவையில்லாமல் கைகளை தட்டி சத்தம் எழுப்பாதீர்கள். அதேபோல் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையிலான வாசனை திரவியங்களை (அதாங்க பெர்ஃப்யூம்) அடித்து கொண்டு விமானத்தில் ஏறும் பயணிகளும் இருக்கின்றனர். இதுவும் தவறு. அளவுக்கு அதிகமாக பெர்ஃப்யூம் பயன்படுத்துவதும் தவறு. இரண்டுமே மற்றவர்களை கடுப்பாக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

அதேபோல் விமானம் தரையிறங்கியதும் மற்றவர்களை இடித்து தள்ளி கொண்டு முதல் ஆளாக கீழே இறங்க ஒரு சிலர் விரும்புவார்கள். மற்றவர்கள் உங்களிடம் இப்படி நடந்து கொண்டால் நீங்கள் எவ்வளவு எரிச்சல் அடைவீர்கள்? அதேதான் மற்றவர்களுக்கும். எனவே விமானத்தில் இருந்து இறங்கும்போது, 'பொறுமை எருமையை விட பெரியது' என்ற புது மொழியை கடைபிடியுங்கள்.

அதேபோன்று இரவு நேரங்களில் செல்போன் திரையை வெளிச்சமாக வைத்து கொண்டு, மற்ற பயணிகளின் தூக்கத்தை கெடுக்க கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். இதில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டாம். ஏற்கனவே இடநெருக்கடியான இருக்கைகள் உள்ளிட்ட காரணங்களால் விமான பயணங்கள் அசௌகரியமானவையாக இருக்கும்.

இப்படிப்பட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் லேசாக கண் அயரும் மற்றவர்களை, செல்போன் திரையை வெளிச்சமாக வைத்து கொண்டு நீங்கள் துன்புறுத்தி விட வேண்டாம். அதேபோல் விமானங்களில் தூங்க கூடியவர்களுக்கு குறட்டையும் ஒரு பிரச்னைதான். நீங்கள் தூங்கும்போது குறட்டை விட்டால், உங்கள் வீடுகளில் இருப்பவர்களே காண்டாகி விடுவார்கள்.

அப்படி இருக்கும்போது, யாரென்றே தெரியாத சக பயணிகள் அமைதியாக இருப்பார்களா? எனவே தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் பீ கேர்ஃபுல். அதேபோல் தூக்க கலக்கத்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருப்பவரின் தோளில் சாயும் பழக்கம் இருந்தாலும் கவனமாக இருங்கள். இது மற்றவர்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கி விடும்.

அதேபோல் உங்களுக்கு மது அருந்து பழக்கம் இருந்தால், அளவாக அருந்தவும். அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு கலாட்டா செய்பவர்கள் மீது மற்ற பயணிகள் எரிச்சல் அடையலாம். விமானம் தரையிறங்கியதும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழலை கூட இது உருவாக்கி விடும் (அரெஸ்ட் கூட ஆகலாம்). எனவே பார்ட்டி என நினைத்து கொண்டு, மது போதையில் சேட்டை செய்ய வேண்டாம்.


Click it and Unblock the Notifications