எது தகர டப்பா, எது பாதுகாப்பு பெட்டகம்ன்றத இனி நம்ம நாட்டுலையே ஆராய போறாங்க! பாரத் என்சிஏபி அறிமுகம் எப்போது?
கார்களின் பாதுகாப்பு தரத்தை ஆராயும் தனது சொந்த அமைப்பை இந்தியா விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. பாரத் என்சிஏபி (Bharat NCAP) என்கிற பெயரில் அது செயல்படும். அக்டோபர் 1 ஆம் தேதி அன்றே இதனை இந்தியா அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாரத் என்சிஏபி எவ்வாறு இந்தியாவில் செயல்பட இருக்கின்றது?, இதனால் இந்திய நுகர்வோர்களுக்கு கிடைக்க இருக்கும் பலன் என்ன?, வாகன உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க இருக்கும் பலன் என்ன?, என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதிய கார்களின் வருகைக்காக காத்திருந்த இந்தியர்களை தன் வசம் ஈர்த்த ஓர் அறிவிப்பே பாரத் என்சிஏபி பற்றியதாகும். இதையே வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்ய இருக்கின்றது, இந்தியா. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து வாகனங்களும் இதில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பாதுகாப்பு தரம் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.
தற்போது செயல்பட்டு வரும் குளோபல் என்சிஏபி மற்றும் லத்தீன் என்சிஏபி உள்ளிட்டவற்றை போலவே இதுவும் ஸ்டார் ரேட்டிங் வாயிலாக ஓர் வாகனத்தின் பாதுகாப்பு தரத்தை வெளியீடு செய்ய இருக்கின்றது. ஆகையால், இந்தியாவின் எதிர்கால கார்களை இது அதிக பாதுகாப்பானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, டொயோட்டா, ஸ்கோடா, கியா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவின் பாரத் என்சிஏபி-க்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் மாருதி சுஸுகி இந்த திட்டத்தை வரவேற்று இருப்பதுதான். நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் பெரிய அளவில் நல்ல ரேட்டிங்கை பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மாதிரியான சூழலில் மாருதி சுஸுகியும் வரவேற்பை வழங்கி இருக்கின்றது. ஆகையால், எதிர்காலத்தில் நிறுவனம் தன்னுடைய வாகனங்களை அதிக பாதுகாப்பானதாக தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் உறுதித் தன்மை மிக சிறப்பானதாக இருப்பதை பாரத் என்சிஏபி உறுதி செய்தால் அதற்கு கிடைக்கும் வரவேற்பு தற்போது இருப்பதைக் காட்டிலும் பலமடங்கு அதிகம் ஆகும்.

இதுவே அனைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கும் கிடைக்க இருக்கும் நன்மைகள் ஆகும். இதேபோல், இந்திய வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க இருக்கும் கார் எந்த அளவு பாதுகாப்பானது என்பதை அறிந்துக் கொள்ளவும் பாரத் என்சிஏபி மிகுந்த உதவியாக இருக்க உள்ளது. குறிப்பாக, பாதுகாப்பான வாகனத்தை குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெரும் உதவியாக பாரத் என்சிஏபி இருக்கப்போகின்றது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களும் பாரத் என்சிஏபி-யில் தாமாக முன் வந்து மோதல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என கூறப்படுகின்றது. இந்த வாகனங்களின் பாதுகாப்பு தர ஆய்வு ஏஐஎஸ் 197இன் கீழ் செய்யப்படும். இதன் கீழ் கிடைக்கும் தர மதிப்புகளை ரேட்டிங்காக கார்களுக்கு வழங்கப்படும்.
என்ன மாதிரியான அளவுருக்களின்கீழ் வாகனங்கள் மதிப்பீடு செய்யப்பட இருக்கின்றன என்பதை ஏற்கனவே இந்திய அரசாங்கம் இறுதி செய்துவிட்டது. ஓர் மோதும்போது பாதசாரிக்கு என்ன மாதிரியான ஆபத்து ஏற்படும்?, பாதசாரியை மோதல் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கின்றதா?, விபத்தின்போது சந்திக்கும் பாதிப்புகளின் அளவு?, சிறுவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?, பெரியவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? இவற்றின்கீழே வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட இருக்கின்றது.
இதுபோன்று இன்னும் பல லிஸ்டில் உள்ளன. அவை அனைத்திலும் சோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனம் எவ்வாறு செயல்படுகின்றது என்பது ஆராயப்பட்டு அதன் அடிப்படையிலேயே ரேட்டிங் வழங்கப்பட இருக்கின்றது. ஒரு ஸ்டார் தொடங்கி ஐந்து ஸ்டார் வரையில் வாகனங்களுக்கு நட்சத்திர ரேட்டிங் தரப்பட இருக்கின்றது.
தன்னார்வமாக வந்து வாகன உற்பத்தியாளர்கள் இந்த சோதனைக்கு ஈடுபடுத்த வேண்டும் என்பதையே பாரத் என்சிஏபி அறிவுறுத்துகின்றது. அதேவேளையில், ஓர் ஷோரூமில் இருந்து வாகனத்தை எடுத்து வந்து தாமாகவே மோதல் ஆய்விற்கு உட்படுத்தவும் இந்த அமைப்பிற்கு சுதந்திரம் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
டிரைவர் இருக்கையுடன் சேர்த்து 8 இருக்கைகள் வரைக் கொண்ட வாகனங்களை மட்டுமே பாரத் என்சிஏபி சோதனைக்கு உட்படுத்த இருக்கின்றது. குறிப்பாக, 3.5 டன் அல்லது அதற்கும் குறைவான வாகனங்களையே பாரத் என்சிஏபி சோதனைச் செய்ய இருக்கின்றது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என அனைத்து வாகனங்களையும் அது சோதனைச் செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்போது, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்கள் குளோபல் என்சிஏபி வாயிலாக மோதல் ஆ்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இது அதிக செலவை வழங்குவதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையிலேயே இந்தியாவிலேயே மோதல் ஆய்விற்கான புதிய அமைப்பு தொடங்கப்பட்டு இருக்கின்றது. இது இந்தியா வாகன உற்பத்தியாளர்கள் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக, இனி குளோபல் என்சிஏபி போன்ற வெளிநாட்டு அமைப்புகளுக்கு சோதனைக்காக வாகனம் அனுப்பி வைக்க வேண்டி இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பை அதிக பாதுகாப்பானதாக ஏற்கனவே விற்பனைக்கு வழங்க ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையிலேயே பாரத் என்சிஏபியை அறிமுகம் செய்வதில் இந்திய அரசு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை பிற நிறுவனங்களின் தயாரிப்புகளையும் அதிக பாதுகாப்பானதாக மாற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









