கார் டிரைவிங்ல நீங்க எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் இந்த தப்ப செஞ்சிருவீங்க... என்னனு தெரியுமா?
கார் ஓட்டுவதில் வல்லவராக இருந்தாலும், ஒரு சிலர் சிறு சிறு தவறுகளை செய்து கொண்டேதான் உள்ளனர். பார்க்க சிறிதாக தெரிந்தாலும், இந்த தவறுகள் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்த கூடியவை. அவ்வாறு கார் ஓட்டும்போது பெரும்பாலானோர் செய்யும் பொதுவான தவறுகளை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். நீங்கள் இனி கவனமாக இருக்க இந்த பதிவு உதவும் என நம்புகிறோம்.

மழை வந்தால் வேகத்தை குறைங்க!
நீங்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது, மழை பெய்ய தொடங்கினால், வேகத்தை குறைப்பது நல்லது. ஏனெனில், மழை பெய்ய தொடங்கியதும், சாலைகள் வழுக்கும் தன்மை கொண்டதாக மாறி விடும். எனவே கார் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் வேகத்தை குறைப்பது அவசியம். ஆனால் பலர் இதனை பொருட்படுத்தாமல் அதிவேகத்தில் சென்று கொண்டே உள்ளனர்.

ஸ்மூத்தா ஓட்டுங்க!
வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஆக்ஸலரேட்டர் பெடலை போட்டு தாறுமாறாக மிதிக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? வேகத்தை குறைக்கும்போது பிரேக் பெடலையும் நீங்கள் கடினமாக மிதிப்பவரா? ட்ரிப்பின் போது இவை இரண்டையும் நீங்கள் தொடர்ச்சியாக செய்பவர் என்றால், எரிபொருளை தேவையில்லாமல் வீணடிக்கிறீர்கள் என அர்த்தம்.

இதுமட்டுமல்லாது பிரேக் பேடுகளும் சேர்ந்து வீண் ஆகும். எனவே காரை கனிவாக ஓட்ட பழகி கொள்ளுங்கள். பெடல்களின் மீது படிப்படியாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் காரை ஸ்மூத் ஆக ஓட்ட முடியும். சரியான பயிற்சியின் மூலமாக, காரை கனிவாக ஓட்டுவதற்கு, உங்களை நீங்கள் பழக்கப்படுத்தி கொள்ள முடியும்.

ரொம்ப லேட்டா சிக்னல் கொடுக்காதீங்க!
வளைவுகளில் திரும்பும் போது, மிகவும் தாமதமாக இன்டிகேட்டர் சிக்னல் கொடுக்கும் தவறான பழக்கம் ஒரு சிலருக்கு இருக்கிறது. சிக்னல் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடுவதால், இந்த தவறு நடக்கிறது. ஆனால் இது அபாயகரமானது. மற்ற டிரைவர்கள் அவர்களின் வாகனங்களை ஸ்லோ செய்ய நேரம் கொடுங்கள். இதற்கு நீங்கள் சரியான நேரத்தில் சிக்னல் கொடுக்க வேண்டும்.

அதுக்குனு முன்னாடியே சிக்னல் கொடுக்காதீங்க!
ஒரு சிலர் தாமதமாக சிக்னல் கொடுக்கிறார்கள் என்றால், இன்னும் சிலரோ முன் கூட்டியே சிக்னல் கொடுத்து விடுகின்றனர். அதாவது வளைவு வரும் என்ற கணிப்பின் அடிப்படையில், ஒரு சிலர் இன்டிகேட்டரை போட்டு விடுகின்றனர். ஆனால் அங்கு வளைவு இருக்காது. எனினும் மற்ற வாகன ஓட்டிகள் நீங்கள் இங்குதான் திரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் வாகனங்களை ஓட்டி வருவார்கள்.

ஆனால் நீங்கள் அங்கு திரும்பாமல், வேறொரு வளைவில் திரும்பினால், விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனென்றால், நீங்கள் உண்மையில் திரும்ப வேண்டிய வளைவு எப்போது வரும்? என்பதற்கு ஏற்ப மற்ற வாகன ஓட்டிகள் தயாராகி இருக்க மாட்டார்கள். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? என்பதை மற்றவர்களுக்கு சரியாக தெரிவிப்பது அவசியம். எனவே மற்றவர்களை குழப்பாதீர்கள்.

இவங்க எல்லாம் ஒரு ரகம்!
இவர்கள் எல்லாம் ஒரு ரகம் என்றால், இன்டிகேட்டரில் தவறு செய்யும் மற்றொரு ரகத்தினரும் இருக்கின்றனர். அவர்கள் இன்டிகேட்டரை ஆஃப் செய்ய மறந்து விடுவார்கள். இன்டிகேட்டரை போட்டு கொண்டே பயணம் செய்வதால், அவர்கள் இப்போ திரும்புவாங்க, அப்போ திரும்புவாங்க என மற்ற வாகன ஓட்டிகள் குழம்பி போய் விடுவார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் திரும்பவே மாட்டார்கள்.
இப்படியெல்லாம் செய்து மற்ற வாகன ஓட்டிகளை குழப்பாதீங்க பாஸ்! வளைவில் திரும்பி முடித்த உடனே மறக்காமல் இன்டிகேட்டரை ஆஃப் செய்து விடுங்கள்.

மறக்காதீங்க!
காரில் நீங்கள் சௌகரியமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சௌகரியம் என்றால், நன்கு தூங்கி விடும் அளவிற்கு அல்ல. எந்த பிரச்னையும் இல்லாமல் காரை ஓட்டும் அளவிற்கு. அதாவது இருக்கை, மிரர்கள் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை சரியாக அட்ஜெஸ்ட் செய்வது அவசியம். ஆனால் சிலர் இதனை செய்ய மறந்து விடுகின்றனர்.

தண்ணி முக்கியம்!
கோடை காலங்களிலோ அல்லது நீண்ட தூரம் பயணம் செய்யும் சமயங்களிலோ தண்ணீர் பாட்டில் இருப்பது அவசியம். ஏனெனில் இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு அடிக்கடி தாகம் எடுக்கலாம். அப்போது தண்ணீர் இல்லாவிட்டால் உங்கள் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்க்க காரில் எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருங்கள்.

ஒன்-வே ரோட்ல போய்ராதீங்க!
ஒரு சிலர் தெரியாமல் ஒன்-வே சாலைகளில் சென்று சிக்கி கொள்கின்றனர். எனவே 'One Way' (அ) 'Do Not Enter' போன்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா? என்பதை உன்னிப்பாக கவனித்து விடுங்கள். குறிப்பாக உங்களுக்கு அறிமுகம் இல்லாத பகுதிகளில் பயணிக்கும்போது, இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

முன்னாடியே புறப்படுங்க!
அதிவேகத்தில் பயணம் செய்வது எப்போதுமே ஆபத்தானது. எனவே எங்கு செல்வதாக இருந்தாலும் மிதமான வேகத்தில் செல்லுங்கள். இதற்கு நீங்கள் கொஞ்சம் முன் கூட்டியே கிளம்புவது அவசியம். அதுவே உங்களுக்கு அறிமுகம் இல்லாத வழித்தடம் என்றால், இன்னும் கொஞ்சம் முன் கூட்டியே கிளம்புங்கள். இதன் மூலம் அவசரமாக செல்வதையும், விபத்துக்களையும் தவிர்க்கலாம்.

செல்போனில் டூமச் கவனம்!
ஸ்மார்ட்போன்கள் விஸ்வரூப வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. ஆனால் காரை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது ஆபத்தானது. அதுவும் ஒரு சிலர் செல்போனில் மூழ்கி விடுகின்றனர். இன்று நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு, வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதும் முக்கியமான காரணமாக உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications








