புது கார் வாங்க போறவர்களின் கவனத்திற்கு! தயவு செய்து இந்த அம்சங்கள் இல்லா காரை சும்மா கொடுத்தாலும் வாங்காதீங்க
இன்றைய நவீன காலத்திலும் விபத்துகள் மிக அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்து விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன, அபராதங்களும் உச்சபட்சமாக உயர்த்தப்பட்டு மலையளவு இருக்கின்றன, இருந்தபோதிலும், நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை துளியளவும் குறைந்தததாக தெரியவில்லை. ஆகையால், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது முற்றிலுமாக கட்டாயமாகி உள்ளது.
"காரில் பயணிக்கும்போது எப்படி நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்" என கேக்குறீங்களா.. இந்த வேலையை காரில் இடம் பெற்றிருக்கும் சில பாதுகாப்பு அம்சங்கள் பார்த்துக் கொள்ளும். நாம் செய்ய வேண்டியது காரை வாங்கும் முன்னர் குறிப்பிட்ட சில பாதுகாப்பு அம்சங்கள் அந்த காரில் இருக்கின்றனவா என்பதை மட்டும் பார்த்தால் போதும்.

அவை மிக மோசமான விபத்தாக இருந்தாலும், நமக்கு இரும்பு அரணாக இருந்து தற்காக்கும். அப்படி என்னென்ன அம்சங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். இதுபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
பாதுகாப்பு தர சான்று (Safety Rating): விலை மலிவாகக் கிடைக்கின்றது, பராமரிப்பு செலவு ரொம்ப குறைவு மற்றும் மைலேஜும் அதிகம் கிடைக்கின்றது என்பதற்காக இந்தியர்கள் பலர் விலை மலிவான சோப்பு டப்பா கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். பராமரிப்பு செலவு மற்றும் மைலேஜ் எல்லாம் பாதுகாப்பு தரத்திற்கு பின்னர் பார்க்க வேண்டியவை ஆகும்.

முதலில் நீங்கள் புதிய காரை வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அந்த கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் எத்தகைய நற்மதிப்பை பெற்றிருக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும். குளோபல் என்சிஏபி-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்தியாவின் பாதுகாப்பான கார்களின் பட்டியல் ஸ்டார் ரேட்டிங் உடன் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த கார்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம். மிக முக்கியமான டாடா மோட்டார்ஸ் தன்னுடைய விலை மலிவான கார்களையே அதிக பாதுகாப்பானதாக தயாரித்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் பஞ்ச் கார்களை கூறலாம். இரண்டும் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்து ஸ்டார்களைப் பெற்றவை ஆகும்.

ஏர் பேக்குகள் (Air Bags): விபத்தின்போது அதிக பாதுகாப்பை வழங்குவதில் முக்கிய பங்கினை ஏர் பேக்குகள் வகிக்கின்றன. இப்போது சில முன்னணி நிறுவனங்கள் ஆறு ஏர் பேக்குகளை தங்களின் அனைத்து கார் மாடல்களின் அனைத்து வேரியண்டுகளிலும் கட்டாயமாக்கி இருக்கின்றன. உதாராணமாக, டாடா மற்றும் ஹூண்டாய் கார்களைச் சொல்லலாம். எனவே நீங்கள் வாங்கும் காரில் 6 ஏர் பேக்குகள் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இசிஎஸ் (Electronic stability control): நவீன கால கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அம்சம் கொண்ட கார்கள் ஸ்கிட் (நழுகாமல்) ஆகாமல் பயணிக்கும். இதுதவிர, மிகவும் ஷார்ப்பான பிரேக்கிங் மற்றும் திருப்புதலையும் வழங்கும். ஆகையால், திடீர் திருப்பங்கள் ஆபத்தற்றதாக இருக்கும். எனவேதான் இந்த அம்சத்தையும் பார்த்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா (360 Degree Camera): இந்த ஒற்றை கேமிரா இருப்பின் உங்களின் காரை சுற்றி நடப்பவை அனைத்தையும் உங்களால் காருக்குள் இருந்தபடியே கண்கானிக்க முடியும். இதுதவிர, சுலபமான பார்க்கிங் மற்றும் பார்க்கிங்கில் இருந்து வெளியேறுதல் ஆகியவற்றையும் நம்மால் செய்துக் கொள்ள முடியும்.
டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tire Pressure Monitoring System): இந்த அம்சம் உங்கள் காரின் டயர்களில் உள்ள காற்றின் அளவைக் கண்கானிக்க உதவும். டயரில் காற்று இல்லை எனில் அது பேராபத்தை விளைவிக்கும். டயர் வெடிப்பு, மைலேஜ் குறைதல், கன்ட்ரோலை இழத்தல் உள்ளிட்டவை ஏற்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கின்றது. ஆகையால், டயரில் போதுமான காற்று இருப்பது எப்போதும் அவசியமானதாக இருக்கின்றது.

ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் (Hill Start Assist Control): இந்த அம்சம் கொண்ட கார்கள் மலையின் ஏற்றமான பாதையில் ஏறுவதை சுலபமாக்குகின்றன. குறிப்பாக, அது மலை பாதையில் ஏறும்போது பிரேக்கை அப்ளை செய்த வண்ணம் இயங்கும். ஆகையால், கார் ரோல் ஆகுவது தவிர்க்கப்படும். எனவேதான் இது மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.
மலை பாதையில் பெரும்பாலான விபத்துகளுக்கு ரோல் ஆகுவதே மிக பெரிய காரணமாக இருக்கின்றது. நீங்கள் பிரேக் பெடலில் இருந்து கால்களை எடுத்த பின்னரும், சில விநாடிகளுக்கு அது பிரேக்கை லேசாக பிடித்த வண்ணம் வேலை செய்யும். மேலும், ஆக்சலரேஷனை வழங்குவதற்கான போதுமான நேரத்தையும் வழங்கும். இத்தகைய சூப்பரான சிஸ்டம் இல்லாத காரை வாங்குவதை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது.

இசோஃபிக்ஸ் (Isofix): இந்த அம்சம் இப்போது அனைத்து கார்களிலும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இது சிறுவர்களுக்கான பாதுகாப்பை வழங்கும் செட்-அப் ஆகும். பொதுவாக, காரில் உள்ள பயணிகளுக்கு சீட் பெல்ட் என்கிற பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டு இருக்கும். இந்த ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான சீட் பெல்ட்டைப் போன்று செயல்படும். மிகப் பெரிய விபத்தில்கூட இது போதுமான பாதுகாப்பை வழங்கும்.
முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார் (front and rear parking sensors): முன் மற்றும் பின்பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் கொண்டிருப்பதால் முன்னால் மற்றும் பின்னால் உள்ள வாகனங்களுடனான மோதலை தவிர்க்க முடியும். இந்த அம்சம் இன்றைய நவீன கால கார்களில் கேமிராவுடன் வழங்கப்படுகின்றது. கேமிராவுடன் இருப்பின் பார்க்கிங் என்பது மிக சுலபமானதாக இருக்கும். பின்னால் வரும் வாகனங்களைப் பார்த்து பாதுகாப்பாக காரை பார்க்/வெளியே எடுத்தல் முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அம்சங்கள் இருந்தால் மட்டும் போதாதுங்க, நாம சாலையில் பயணிக்கும் போது அதிக விழிப்பு மற்றும் கவனத்துடன் பயணித்தல் வேண்டும். அத்துடன், சீட் பெல்ட் அணிவது போன்ற போக்குவரத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே நம்மை நாமே எதிர்பாரா விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications
